/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடற்கரை - தாம்பரம் இடையே இலவச பஸ் இயக்குகிறது ரயில்வே ! மார்ச் 10ல் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை துவக்கம்
/
கடற்கரை - தாம்பரம் இடையே இலவச பஸ் இயக்குகிறது ரயில்வே ! மார்ச் 10ல் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை துவக்கம்
கடற்கரை - தாம்பரம் இடையே இலவச பஸ் இயக்குகிறது ரயில்வே ! மார்ச் 10ல் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை துவக்கம்
கடற்கரை - தாம்பரம் இடையே இலவச பஸ் இயக்குகிறது ரயில்வே ! மார்ச் 10ல் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை துவக்கம்
UPDATED : பிப் 26, 2026 11:41 AM
ADDED : பிப் 26, 2026 05:33 AM

சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே, ரயில்கள் ரத்தால் ஆறு நாட்களாக பயணியர் திண்டாடி வருகின்றனர். ரயில்வேயின் சரியான திட்டமிடல் இல்லாததே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சிக்கலுக்கு தீர்வு காண, வரும் 28ம் தேதி முதல், கடற்கரை - தாம்பரம் இடையே இலவச பேருந்துகளை இயக்கப்போவதாக, தெற்கு ரயில்வே நேற்றிரவு அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், 735 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்கான நடை மேம்பால பணிக்காக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால், போதிய ரயில் வசதியின்றி பயணியர் திண்டாடி வருகின்றனர். இயக்கப்பட்ட ரயில்களிலும் நெரிசல் அதிகமானது. ஆறு நாட்களாக இந்த பிரச்னை பெரிதாக தொடர்வதற்கு, ரயில்வேயின் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, விரைவு ரயில் பாதையில் புறநகர் ரயில் இயக்க வேண்டும்; பணிகள் முடிந்துள்ள நிலையில், கடற்கரை - பரங்கிமலை மேம்பால ரயில் சேவையை துவக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், தெற்கு ரயில்வே நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை:
எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணி காரணமாக, கடற்கரை -- செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணியருக்கு போதிய அளவில் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 60க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணியருக்காக, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை; கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கும் தலா, 20 சிறப்பு இலவச பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த பேருந்துகள் வரும் 28ம் தேதி முதல் இயக்கப்படும். அலுவலக நேரங்களில், காலை 6:40 மணி முதல் 9:40 மணி வரை; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, 7 நிமிட இடைவெளி யில் இந்த பேருந்துகள் இயக்கப்படும்.
இந்த பேருந்துகள் சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், கிண்டி, மயிலாப்பூர், எழிலகம், தலைமை செயலகம் வழியாக இயக்கப்பட உள்ளன. ஒரு சில பேருந்துகள் கடற்கரையில் இருந்து தி.நகர், எழும்பூர், சென்ட்ரல் வழியாக இயக்கப்பட உள்ளன.
கடற்கரை -- தாம்பரம் இடையே 15 பெட்டிகள் கொண்ட, 10 பயணியர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் தாம்பரம், மாம்பலம், கிண்டி, எழும்பூர் ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.
இந்த ரயில் நிலையங்களில் மட்டுமே, 15 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் நிறுத்தும் வசதி இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி -- பரங்கிமலை இணைப்பு ரயில் பணிகள், 17 ஆண்டுகள் நடந்து வந்து, தற்போது முடிந்துள்ளன. இந்த ரயில்சேவையை துவங்க வேண்டும் என, பயணியர் பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையே, வேளச்சேரி -- பரங்கிமலை மின்சார ரயில் சேவை, வரும் மார்ச் 10ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. இதன் வாயிலாக, தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் பயணியருக்கு, மற்றொரு இணைப்பு ரயில் சேவை கிடைக்க வழி வகை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பயணியர் அவதிக்கு தீர்வு காணும் வகையில், நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க., - எம்.பி., தயாநிதி, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை சந்தித்து, நேற்று கோரிக்கை மனு அளித்தார்.

