ADDED : அக் 09, 2025 02:15 AM
தாம்பரம், தாம்பரத்தில், இரவு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மீது கார் மோதியதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், வெம்பாக்கம், வேதநாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 53; தாம்பரம் காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு உதவி ஆய்வாளர்.
நேற்று முன்தினம், இரவு பணியில் இருந்த குமார், மேற்கு தாம்பரம், வள்ளுவர் குருகுலம் பள்ளி சுற்றுச்சுவர் ஓரமாக நின்று, போலீசாருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, வாலாஜாபாதில் இருந்து ஆதம்பாக்கம் நோக்கி சென்ற, 'ஹூண்டாய்' கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, உதவி ஆய்வாளர் குமார் மீது மோதி, பள்ளி சுற்றுச்சுவரை இடித்து நின்றது.
வலது நெற்றி, விரல், வலது முட்டி ஆகிய இடங்களில் உதவி ஆய்வாளர் குமாருக்கு காயம் ஏற்பட்டது.
தாம்பரம் மாவட்ட மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, கார் ஓட்டி வந்த ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கந்தசாமி, 64, என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர். துாக்க கலக்கத்தில் விபத்து நடந்ததாக, கார் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.