/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
36 மணி நேரத்தில் மூன்று உறுப்பு மாற்று சிகிச்சை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை
/
36 மணி நேரத்தில் மூன்று உறுப்பு மாற்று சிகிச்சை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை
36 மணி நேரத்தில் மூன்று உறுப்பு மாற்று சிகிச்சை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை
36 மணி நேரத்தில் மூன்று உறுப்பு மாற்று சிகிச்சை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை
ADDED : ஜூலை 26, 2025 12:24 AM

ராயபுரம், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், 36 மணி நேரத்தில் மூன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அம்பத்துார், கள்ளி குப்பத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த், 19; பி.சி.ஏ., மாணவர். கடந்த 21ம் தேதி, தன் நண்பரை ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் வீடு திரும்பினார்.
அப்போது, மணமேடு என்ற இடத்தில் எதிரே வந்த வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.
அவரது பெற்றோர், ஹேமந்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதையடுத்து, அவரது சிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல், இதய வால்வுகள் மற்றும் நுரையீரல் ஆகியவை எடுக்கப்பட்டன.
அதில், ஒரு சிறுநீரகம், கல்லீரல் ஸ்டான்லி அரசு மருத்துவமனை நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை நோயாளிக்கும், நுரையீரல் எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் சென்னை நோயாளிக்கும், இதய வால்வுகள் பிரன்டியர் லைப்லைன் மருத்துவமனைக்கும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக, தமிழக அரசின் உறுப்பு மாற்று ஆணையத்தின் வழியாக பதிவு செய்து காத்திருக்கும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.
தானமாக வழங்கப்பட்ட கண்கள், எழும்பூர் கண் மருத்துவமனையில் தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக சேமிக்கப்பட்டு உள்ளது.
1,000வது நன்கொடையாளர் இது குறித்து ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:
மூளைச்சாவு அடைந்த ஹேமந்த் உடலில் இருந்து எடுக்கப்பட்ட கல்லீரல், சிறுநீரகம் மற்றும் உயிருள்ள நன்கொடையாளர் ஒருவரிடம் இருந்து பெற்ற சிறுநீரகம் ஆகியவை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 36 மணி நேரத்திற்குள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மேலும், 1,000வது உயிருள்ள நன்கொடையாளரிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகம், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேவைப்பட்ட நோயாளிக்கு, நிபுணர்கள் குழுவால் மாற்று அறுவை சிகிச்சை அர்ப்பணிப்புடன் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் மகேஷ், துணை முதல்வர் டில்லிராணி, நிலைய மருத்துவ அலுவலர் வனிதா மலர் ஆகியோர் உடல் உறுப்பு தானம் செய்த ஹேமந்த் உடலுக்கு, மாலை அணிவித்து மலர் துாவி அரசு மரியாதை செலுத்தினர்.