/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சியும் குடிநீர் வாரியம் இணைந்து கண்ணாமூச்சி! இரு முறை கட்டணம் வசூலால் குழப்பம்
/
மாநகராட்சியும் குடிநீர் வாரியம் இணைந்து கண்ணாமூச்சி! இரு முறை கட்டணம் வசூலால் குழப்பம்
மாநகராட்சியும் குடிநீர் வாரியம் இணைந்து கண்ணாமூச்சி! இரு முறை கட்டணம் வசூலால் குழப்பம்
மாநகராட்சியும் குடிநீர் வாரியம் இணைந்து கண்ணாமூச்சி! இரு முறை கட்டணம் வசூலால் குழப்பம்
UPDATED : ஆக 29, 2025 07:06 AM
ADDED : ஆக 28, 2025 10:56 PM

குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற மாநகராட்சியும், குடிநீர் வாரியமும் சாலை துண்டிப்பு கட்டணம் என்ற பெயரில், இரண்டு முறை வசூல் நடத்தி கண்ணாமூச்சு ஆடுகின்றன. அதோடு, ஐ.டி.சி., என்ற அபிவிருத்தி மேம்பாட்டு கட்டணமும் வசூலிக்கப்படுவதால், புதிய வீடு கட்டுவோர் பெரும் தொகையை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் வீடு மற்றும் வணிகம் சார்ந்த கட்டடம் கட்ட, கட்டடத்தின் பரப்பை பொறுத்து, மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ.,வின் அனுமதி பெறவேண்டும். இதற்கு கட்டணம் செலுத்தும்போது, குடிநீர், கழிவுநீர், மின் இணைப்புக்கு, சாலை துண்டிப்பு கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
இந்த வகையில், பேருந்து சாலையில் சாலை துண்டிப்பு கட்டணம், சதுர மீட்டருக்கு 5,515 ரூபாயும், உட்புற சாலைகளில் 4,525 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
சிறு கட்டடமாக இருந்தால், மாநகராட்சியும், மூன்று மாடிக்கும் மேலான கட்டடங்கள் என்றால், சி.எம்.டி.ஏ.,வும் கட்டணம் வசூலிக்கின்றன.
கட்டுமான பணி முடிந்து, குடிநீர், கழிவுநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்கும்போது, மீண்டும் சாலை துண்டிப்பு கட்டணம் என்ற பெயரில், குடிநீர் வாரியமும் வசூல் நடத்துகிறது.
இதனால், ஒரு சேவைக்கு இரண்டு துறைகளில் சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதால், ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது, எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுதவிர, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் விதிகளின்படி, 1998ம் ஆண்டுக்கு பின் கட்டிய கட்டடங்களுக்கு, ஐ.டி.சி., என்ற அபிவிருத்தி மேம்பாட்டு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
மூன்று மாடி வீடு, மொத்தம் 15,000 சதுர அடிக்கு மேல் கட்டினால், 40,425 ரூபாய் ஐ.டி.சி. கட்டணம் செலுத்த வேண்டும். இதன்படி, ஒரு கட்டடத்திற்கு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு கட்டணம் மற்றும் ஐ.டி.சி., கட்டணம் சேர்த்து, 75,000 ரூபாய் வரை செலுத்த வேண்டி உள்ளது. இது, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
விரிவாக்க பகுதிகளிலும் 1998 ம் ஆண்டு முதல் இந்த கட்டணம் வசூலிப்பது பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற காத்திருப்போர் கூறியதாவது:
கடந்த 1998ம் ஆண்டு முதல் கட்டிய கட்டடத்திற்கு, ஐ.டி.சி., கட்டணம் செலுத்த கூறுகின்றனர். நாங்கள், 2011ம் ஆண்டுக்குபின், கட்டிய கட்டடத்திற்கு வசூலிக்க கேட்கிறோம்.
கட்டட அனுமதி பெறும்போது, சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்தியபின், மீண்டும் செலுத்த சொல்வது எந்தவிதத்தில் நியாயம். சாலை துண்டிப்பு கட்டணம் நிர்ணயிப்பதிலும் குளறுபடி உள்ளது. சி.எம்.டி.ஏ., - மாநகராட்சி, குடிநீர் வாரியம் இணைந்து, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -