/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் போக்குவரத்து போலீசார் நெரிசலில் சிக்கி திணறும் வாகன ஓட்டிகள்
/
மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் போக்குவரத்து போலீசார் நெரிசலில் சிக்கி திணறும் வாகன ஓட்டிகள்
மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் போக்குவரத்து போலீசார் நெரிசலில் சிக்கி திணறும் வாகன ஓட்டிகள்
மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் போக்குவரத்து போலீசார் நெரிசலில் சிக்கி திணறும் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 13, 2026 05:10 AM

சென்னை: போக்குவரத்தை சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் போலீசார், ரீல்ஸ் மோகத்தில், மொபைல் போன்களில் மூழ்கி கிடப்பதால், சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து, வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
கவனச் சிதறல் ஏற்படுவதால், போக்குவரத்து சீர் செய்தல் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கு நியமிக்கப்படும் போலீசார், பணியிடங்களில் மொபைல் போனை பயன்படுத்தக் கூடாது என, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, முக்கிய பிரமுகர்கள், பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் போலீசார், பணியிடங்களில் யாரும் கண்டிப்பாக மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது.
வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பு, முக்கிய போராட்டங்களின் போது, எஸ்.ஐ.,க்கள் கீழ் உள்ள போலீசார், மொபைல் போனை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. இது பற்றிய சுற்றறிக்கை, காவல் நிலைய பலகைகளில் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.
தினமும், காலை 7:00 மணிக்கு, போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு செல்லும் முன், 'ரோல்கால்' எனும் அணி வகுப்பில் பங்கேற்பர். அப்போது, மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான சுற்றறிக்கையை, தினமும் அவர்களுக்கு படித்து காட்ட வேண்டும் என்றெல்லாம், போலீஸ் உயர் அதிகாரிகள் ஏற்கனவே உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
போலீசார், ஏதேனும் அவசர காரணம் எனில், முறையான அனுமதி பெற்று மொபைல் போனை பயன்படுத்த வேண்டும். பணியிடங்களில், காவல் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களும் மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது.
மீறினால், அரசு ஊழியர் நடத்தை விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல முறை உயர் அதிகாரிகள் எச்சரிக்கை செய்து விட்டனர்.
ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணியாற்றும் போக்குவரத்து போலீசார், அதிகாரிகளின் உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டனர். பணியிடங்களில் அவர்கள், 'ரீல்ஸ்' மோகத்தில் மொபைல் போன்களில் மூழ்கி கிடக்கின்றனர்.
நண்பர்கள், உறவினர் களிடம் வீடியோ அழைப்பில், அரட்டை அடிப்பதிலேயே பல மணி நேரத்தை செலவு செய்து விடுகின்றனர். இதனால், சாலைகளில், போக்கு வரத்து ஸ்தம்பித்து வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
வாகனங்களின் இரைச்சலைக்கூட போலீசார் கண்டுகொள்வது இல்லை. அவர்கள், தங்கள் பணியை சரியாக கவனித்தால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்ற பேச்சுக்கு இடமில்லை.
அவர்கள் பணியில் கவனம் செலுத்தாமல், மொபைல் போனில் மூழ்கிக்கிடப்பதே பல்வேறு சிக்கல்களுக்கு காரணம். உயர் அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தினால் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

