/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெரினாவில் ஆட்டோ ஓட்டுநர் கொலை தோழியின் மகன் வெறிச்செயல்?
/
மெரினாவில் ஆட்டோ ஓட்டுநர் கொலை தோழியின் மகன் வெறிச்செயல்?
மெரினாவில் ஆட்டோ ஓட்டுநர் கொலை தோழியின் மகன் வெறிச்செயல்?
மெரினாவில் ஆட்டோ ஓட்டுநர் கொலை தோழியின் மகன் வெறிச்செயல்?
ADDED : நவ 08, 2025 02:42 AM

சென்னை: மெரினா கடற்கரை மணற்பரப்பில் நேற்று அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிடந்த ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தோழியின் மகன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
மெரினா லுாப் சாலை நொச்சிக்குப்பத்தில், நேற்று அதிகாலை மக்கள் வழக்கம்போல நடைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, மணற்பரப்பில் வாலிபர் ஒருவர், தலையின் பின்புறம் பலத்த வெட்டுக்காயத்துடன் கிடப்பதை கண்டனர்.
தகவல் அறிந்து வந்த மெரினா போலீசார், அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர், அங்கு உயிரிழந்தார்.
அங்கு கிடந்த, வங்கி சேமிப்பு அட்டையை வைத்து விசாரணை மேற்கொண்டதில், கீழ்ப்பாக்கம், சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுந ரான அந்தோணி, 40, என்பதும், திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருப்பதும் தெரிய வந்தது.
இது குறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
கொலை செய்யப்பட்ட அந்தோணியின் சகோதரிக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் குழந்தை பிறந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக, அன்றைய தினம் இரவு மது அருந்தி, நொச்சிக்குப்பத்தில் உள்ள தோழி மலர் என்பவரை பார்ப்பதற்காக ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார்.
வள்ளுவர்கோட்டம் அருகே நுங்கம்பாக்கம் போலீசாரின் வாகன தணிக்கையில் சிக்கினார். மது அருந்தி ஆட்டோ ஓட்டியதற்காக, 10,000 ரூபாய் அபராதம் விதித்த போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனால், வேறு ஒரு ஆட்டோவில் நொச்சிக் குப்பத்திற்கு சென்றுள்ளார்.
மலரின் வீட்டிற்கு சென்று, அவரிடம் 10,000 ரூபாய் வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு, தற்போது பணம் இல்லை என்றும், நாளை ஏற்பாடு செய்து தருவதாகவும், மலர் கூறியுள்ளார்.
ஆட்டோ இல்லாமல் வீட்டிற்கு செல்ல முடியாது என்பதால், மணற்பரப்பில் உறங்கிவிட்டு காலை எழுந்து பணத்தை வாங்கி செல்கிறேன் எனக்கூறி, மணல் பரப்பில் உறங்கச் சென்றார்.
ஏற்கனவே அந்தோணியுடன் பழகுவதை கைவிடும்படி மலரின் மகன் ஆகாஷ் வலியுறுத்தி உள்ளார். இருப்பினும் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் எதிரே மணற்பரப்பில் அந்தோணி உறங்கிக் கொண்டிருந்ததை அறிந்த ஆகாஷ், தன் நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் வெட்டி தப்பியது தெரிய வந்தது.
இதில் படுகாயமடைந்த அந்தோணிக்கு, அதிக அளவில் ரத்தம் வெளியானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.
கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

