/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு
/
சென்னை ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு
ADDED : நவ 08, 2025 02:34 AM
சென்னை: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை, சோழவரம் ஏரிகள் வாயிலாக சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை வாயிலாக, இவற்றிற்கு நீர்வரத்து கிடைத்து வருகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அதிகளவில் நீர்வரத்து கிடைத்தது. இதனால், ஏரிகள் மற்றும் கரை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, சீரான அளவில் நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை நீர்வளத்துறையினர் துவங்கினர்.
நேற்று மாலை நிலவரப்படி, 3.23 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில், 2.70 டி.எம்.சி., நீர் இருந்தது. வினாடிக்கு 1,280 கனஅடி நீர்வரத்து கிடைத்தது. இதில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல, 3.30 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், 2.97 டி.எம்.சி., நீர் இருந்தது.
வினாடிக்கு 415 கனஅடி நீர்வரத்து கிடைத்தது. ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3.64 டி.எம்.சி.,யில் தற்போது 3.25 டி.எம்.சி., நீர் இருந்தது.
ஏரிக்கு வினாடிக்கு 790 கனஅடி நீர்வரத்து கிடைத்தது. இதில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

