/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோபா தொழிற்சாலையில் தீ பொருட்கள் எரிந்து நாசம்
/
சோபா தொழிற்சாலையில் தீ பொருட்கள் எரிந்து நாசம்
ADDED : செப் 11, 2024 12:05 AM
கோவை;சின்னவேடம்பட்டியில் உள்ள சோபா ரிப்பேர் செய்யும், தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாகின.
சரவணம்பட்டி வடக்கு விநாயகபுரத்தை சேர்ந்தவர் மூக்கையா, 59. இவர் சின்னவேடம்பட்டியில் பாலாஜி குஷன் ஒர்க்ஸ் என்ற பெயரில், சோபா பழுது பார்க்கும் தொழிற்சாலை வைத்துள்ளார். அங்கு சோபா குஷன் அமைப்பதற்காக, 'போம்' (பஞ்சு) உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் இருப்பு இருந்துள்ளது.
நேற்று மதியம் தொழிற்சாலையின் அருகில் இருந்த, மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியதில், தீப்பொறி ஏற்பட்டு, சோபா தயாரிக்க வைத்திருந்த பஞ்சு மேல் விழுந்து தீப்பற்றியது. அருகில் இருந்த பொருட்கள் அனைத்திலும் தீ பரவியது.
தகவல் அறிந்த, தீயணைப்புத்துறை கோவை மாவட்ட அலுவலர் புளுகாண்டி, உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி, வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மணிகண்டன், முத்துச்செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மூன்று தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் மூன்று மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்.