ADDED : ஜூலை 19, 2026 07:13 PM
வால்பாறை: வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதி இல்லாததால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து, அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் வெளியூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அக்காமலை, கருமலை, வெள்ளமலை எஸ்டேட் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் பழைய பஸ் ஸ்டாண்டில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால், பயணியர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பயணியர் கூறியதாவது:
வால்பாறை நகராட்சி அலுவலகத்தின் முன்பாக, பழைய பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டில் பயணியர் அமர இருக்கை மற்றும் குடிநீர் வசதி இல்லை. குறிப்பாக, கழிப்பிட வசதியும் இல்லை.
ஏற்கனவே நகராட்சி சார்பில் கட்டப்பட்ட கழிப்பிடம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. பஸ்சிற்காக பல மணி நேரம் காத்திருக்கும் பள்ளி மாணவர்கள், பயணியர், சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகின்றனர். பயணியர் நலன் கருதி அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
