ADDED : ஆக 02, 2024 06:09 AM

மேட்டுப்பாளையம்:
சிறுமுகை, லிங்காபுரம் உள்பட பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில், தண்ணீர் இல்லாத போது, நேந்திரன், கதளி, பூவன், ரோபஸ்டா என, பல்லாயிரக்கணக்கான வாழைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் பில்லூர் அணை நிரம்பி வழிகிறது.
அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர், பவானி ஆறு வழியாக, பவானிசாகர் அணைக்கு செல்கிறது. பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அணையின் நீர் தேக்கப்பகுதிகளில், பயிர் செய்துள்ள வாழை மரங்கள், தண்ணீரில் மூழ்கி வருகின்றன. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
விவசாயிகள் கடன் பெற்று வாழைகள் பயிர் செய்துள்ளனர். தார் விட்டு இன்னும் இரண்டு மாதத்தில், அறுவடை செய்யும் நிலையில், பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால், ஏராளமான வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கி வருகின்றன. இதனால் ஒவ்வொரு விவசாயிகளுக்கும், பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண் துறை, வருவாய் துறை, வாழையின் சேதத்தை கணக்கிட்டு, இழப்பீட்டுத் தொகை வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.