/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடுகள் வியாபாரம் மந்தம்: பறக்கும் படையால் அச்சம்
/
ஆடுகள் வியாபாரம் மந்தம்: பறக்கும் படையால் அச்சம்
ADDED : ஏப் 06, 2024 08:11 PM
அன்னூர்;பறக்கும் படை அச்சம் காரணமாக, நேற்று அன்னூர் ஆடு சந்தையில் வியாபாரம் படு மந்தமாக இருந்தது.
அன்னூரில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அதிகாலை முதல் காலை 10 :00 மணி வரை ஆடு சந்தை நடைபெறும். இதில் கர்நாடகாவில் இருந்தும், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் கொண்டு வரப்படும். கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஆர்வமாக ஆடு வாங்கி செல்வார்கள்.
வழக்கமாக, ரம்ஜான் பண்டிகைக்கு முந்தைய சனிக்கிழமை நடைபெறும் சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு, ஆடுகள் விற்பனையாவது வழக்கம். ஆனால் நேற்று 50 லட்சம் முதல் 55 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே ஆடுகள் விற்பனையானது.
குன்னத்தூராம்பாளையத்தை சேர்ந்த ஆடு வியாபாரிகள் கூறுகையில், ' பறக்கும் படையினர் அதிக அளவில் சோதனை நடத்தி வருகின்றனர். பல இடங்களில் ஏராளமான பணத்தை பறிமுதல் செய்து விட்டனர். ஆடு வியாபாரத்தில் உரிய ஆவணம் இல்லை.
எனவே பணத்தை திரும்ப பெறுவதில் சிரமம் இருக்கிறது. இந்த வாரம் சந்தைக்கு ஆடு வாங்க வருவோர் எண்ணிக்கை, கணிசமாக குறைந்து விட்டது. வியாபாரம் ரம்ஜானுக்காக அதிகரிக்கவில்லை. வழக்கமாக நடைபெறும் வியாபாரம் மட்டுமே நடைபெற்றது' என்றனர்.

