ADDED : ஜூலை 22, 2024 02:56 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு மேம்பாலத்தில் பாதி மின் விளக்குகள் ஒளிராததால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்த வழித்தடத்தில் முக்கிய இடம் மற்றும் மேம்பாலங்களில் மின் விளக்குகள் சரிவர ஒளிராமல் உள்ளன. சில இடங்களில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளது.
இதனால், இரவு நேர பயணத்தின் போது, வாகன ஓட்டுநர்கள் திக்திக் மனநிலையில் பயணிக்கின்றனர். மழை காலங்களில் பைக் ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர். மேலும், மின் விளக்குகள் ஒளிராத இடத்தில் சிலர் ரோட்டை கடப்பதால் விபத்து அபாயம் அதிகம் உள்ளது.
இதே போன்று மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும் மின் விளக்குகள் ஒளிராததால் இரவு நேரத்தில் சர்வீஸ் ரோட்டில் நடந்து செல்லும் மக்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் இடத்திலும், இருளில் பயணிக்கும் நிலை உள்ளது.
மேம்பாலத்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் இரவு முழுவதும் மின்விளக்குகள் ஒளிர்வதில்லை என, பொதுமக்கள் புகார் அளித்தும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தற்போது வரை செவி சாய்க்காமல் உள்ளனர்.
மேலும், புகார் அளித்தால் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே மின் விளக்குகள் முறையாக எரிவதாகவும், அதன் பின், பழைய படி இருளாக காட்சியளிக்கிறது, என, மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதை கவனித்து மின் விளக்குகளை சரி பார்த்து ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.