/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடையில் கடும் போக்குவரத்து நெரிசல்; உயர்மட்ட பாலம் தான் தீர்வா?
/
காரமடையில் கடும் போக்குவரத்து நெரிசல்; உயர்மட்ட பாலம் தான் தீர்வா?
காரமடையில் கடும் போக்குவரத்து நெரிசல்; உயர்மட்ட பாலம் தான் தீர்வா?
காரமடையில் கடும் போக்குவரத்து நெரிசல்; உயர்மட்ட பாலம் தான் தீர்வா?
ADDED : செப் 11, 2024 10:42 PM

மேட்டுப்பாளையம் : போக்குவரத்து நெரிசலால் காரமடை நகரில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காரமடை நகரில், காரமடை-மேட்டுப்பாளையம் சாலை, காரமடை --அன்னூர் சாலை, காரமடை --தோலம்பாளையம் சாலை, காரமடை-சிறுமுகை சாலை என முக்கிய சாலைகள் உள்ளன.
ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள், கோவையில் இருந்து காரமடை வழியாக மேட்டுப்பாளையம் சென்று, அங்கிருந்து ஊட்டி செல்கின்றனர். இதுதவிர உள்ளூர் வாசிகள், அலுவலகம் நிமித்தமாக செல்வோர் என அனைவரும் நகரின் இச்சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலைகளில் காலை, மாலை மற்றும் விசேஷ நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் காரமடையில் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். பெருமாளுக்கு உகுந்த சனிக்கிழமையில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதே போல் காரமடை மேற்கு பகுதியில் உள்ள தோலம்பாளையம் சாலையில் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இந்த தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருள், உற்பத்தி செய்யப்படும் பொருள்களை கொண்டு செல்ல நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கண்ணார்பாளையம் சாலை வழியாகவும், சிறுமுகை சாலை வழியாகவும், கோவையில் இருந்தும் காரமடை நகர் பகுதிக்கு வந்து செல்கின்றன.
கோவையில் இருந்து வரும் போது காரமடை நகர் பகுதியை நெருங்கியதும் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இப்பாலத்தின் மீது வாகனங்கள் ஏறி, இறங்கியதுமே தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசலால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. சில சமயங்களில் பாலத்தின் மீதே வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.
இந்த போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்புகள் மற்றும் சாலை விரிவாக்கம் செய்யப்படாததே காரணம். ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் காரமடை நகர் பகுதி முழுவதும் கடந்து செல்லும் அளவிற்கு புதிதாக உயர் மட்ட பாலம் அமைக்கப்பட வேண்டும் என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.