ADDED : ஜூலை 27, 2026 06:21 PM
மலுமிச்சம்பட்டி: மலுமிச்சம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் ஹிந்து முன்னணி சார்பில் கோவில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம், மாவட்ட பொது செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது.
கோட்ட செயலாளர் அசோக் பேசுகையில், தமிழ்நாடு கோவில்களில் கட்டண தரிசனம், 1967-ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னரே அமல்படுத்தப்பட்டது. 1987-ல் கோவில் நிலங்கள், 5.25 லட்சம் ஏக்கர் என அறிவித்த தமிழ்நாடு அரசு, 2019-ல் 4.78 லட்சம் ஏக்கர் என அறிவித்தது. இதில், 1.23 லட்சம் ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அறநிலைய துறையின் கீழ், 22 ஆயிரத்து, 600 கடைகள், 33 ஆயிரத்து, 627 மனைகளும் உள்ளன.
இதன் மூலம், 800 முதல், ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டு வருமானம் வரவேண்டும். இவ்வளவு கோடி வருமானம் வரும் நிலையில், தரிசன கட்டணம் வசூலிப்பது நியாயமில்லை. அரசு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும்,’’ என்றார்.
மாவட்ட துணை தலைவர் பிரபு, மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பா.ஜ. பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
