ADDED : ஜூலை 12, 2026 04:10 PM
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு பிரச்னைக்கு... 8 ஆண்டுகளாக அலைமோதும் மக்கள்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவில், 5 மீ., அகலத்தில் இருக்கும் சர்வீஸ் ரோட்டை, 6.5 மீட்டருக்கு அகலப்படுத்தி, வடிகால் வசதியுடன் மேம்படுத்த வேண்டும் என, எட்டு ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். பல முறை ஆய்வு செய்த நிலையில், இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். கிணத்துக்கடவில் மேம்பாலத்தில் வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் செல்கிறது. புது பஸ் ஸ்டாண்ட்டுக்கும், மார்க்கெட், குடியிருப்பு பகுதி மற்றும் கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் பயணிப்பதற்காகவும், பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
சர்வீஸ் ரோடு வழித்தடத்தில், பெட்ரோல் பங்க், பெண்கள் அரசு பள்ளி, தேவாலயம், கடைகள், உணவகங்கள், தனியார் கல்லூரி உள்ளிட்டவை அமைந்துள்ளன. மேலும் இப்பகுதியில், 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
சர்வீஸ் ரோடானது, தற்போது, 5 மீட்டர் அகலத்தில் உள்ளது. இந்த குறுகலான ரோட்டில், இரு வழிபாதை போன்று வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், பாதசாரிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.
இதனால், பள்ளி மற்றும் கல்லூரிக்கு, 4 கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. வேகமாக செல்ல வேண்டும் என்பதால், ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. எனவே, சர்வீஸ் ரோட்டை விரைவில் அகலப்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
கடந்த, 2018ல் இருந்து தற்போது வரை, சிங்காரம்பாளையம் பிரிவு முதல் கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்ட் வரை ‘ஒன்வே’யில் பயணிக்கிறோம்.
இந்த ரோட்டில் அடிக்கடி கழிவு நீர் வெளியேறுவது, குடிநீர் குழாய் கசிவினால் தண்ணீர் ரோட்டில் வழிந்து ஓடுவது, ரோடு சேதம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம்.
கடந்த, 2023ல் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, நிலம் கையகப்படுத்தி கொடுக்க வேண்டும் என, கூறினர்.
இந்த ரோட்டை, 1.5 மீட்டருக்கு கூடுலாக விரிவுபடுத்தி, 6.5 மீ., அகலத்தில் அமைக்கவும், வடிகால் வசதிகள் ஏற்படுத்தவும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அளவீடு பணிகள் நடந்தது.
அதன்பின், கோவை கலெக்டர் பவன்குமார் மற்றும் இவருக்கு முன் கலெக்டராக இருந்த கிராந்திகுமார், அரசுத்துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ.,க்கள், அரசியல் கட்சியினர் என, பலர் ரோட்டை ஆய்வு செய்தனர்.
ஆனால், சர்வீஸ் ரோடு பணிகள் நடந்தபாடில்லை. இப்பகுதி மக்கள் நலன் கருதி, விரைவில் சர்வீஸ் ரோட்டை அகலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘சர்வீஸ் ரோடு அகலப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு செய்து, திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு வந்தவுடன் பணிகள் துவங்கப்படும்,’ என்றார்.
