/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
/
ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 21, 2024 10:35 PM
மேட்டுப்பாளையம்;தாசம்பாளையத்தில் இன்று, அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள், கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையத்தில், அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, முளைப்பாரி ஊர்வலம், தாசம்பாளையம் ராமர் கோவிலில் இருந்து, கோவிலுக்கு வந்தடைந்தது. இரவு வாஸ்து சாந்தி பூஜையும், பூர்ணாஹுதி சாற்று முறையும் நடந்தது.
நேற்று, முதல் கால ஹோமங்கள், வேத பாராயணம், திவ்ய பிரபந்தம், சாற்று முறை நடைபெற்றன. இன்று (22ம் தேதி) காலை, 7:00 மணிக்கு யாக பூஜையை தொடர்ந்து, யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் ஊர்வலமாக புறப்படுகின்றன.
காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள், கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து தச தரிசனம், திருவாராதனம், வேத அலங்கார தரிசனம் ஆகியவை நடைபெற உள்ளன. மாலை ஆறு மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா புறப்பாடு நடைபெற உள்ளது.
காரமடை அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார் வேதவியாச சுதர்சன பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி வேங்கடாத்ரி, வேதவியாச வெங்கடேச பட்டர் சாமிகள், கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், நிர்வாகத்தினர், ஜானகிராம் அறக்கட்டளை நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்கின்றனர்.

