ADDED : செப் 08, 2024 11:00 PM
மேட்டுப்பாளையம்:பவானி ஆற்றில், விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதை அடுத்து, ஆற்றின் ஆபத்தான பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை, திருப்பூரை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெறும் விநாயகர் சிலை கரைப்பு மற்றும் ஊர்வலத்தை காண வருவார்கள். அவர்கள் சிலை கரைப்பின் போது, வேடிக்கை பார்த்துவிட்டு, பவானி ஆற்றில் குளித்து மகிழ வாய்ப்புள்ளது.
பவானி ஆற்றில் பில்லூர் அணை, பம்பிங் ஹவுஸ்களில் இருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடும் போது, தண்ணீர் வரத்து அதிகரிக்கும். அப்போது பவானி ஆற்றில் குளிப்பவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க லைப் கார்ட்ஸ் பிரிவு போலீசார் தொடர்ந்து 24 மணி நேரமும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் கூறியதாவது:
பவானி ஆற்றின் ஆபத்தான பகுதிகள் என வெள்ளிப்பாளையம் பாயிண்ட் 1, 2, 3, சிறுமுகை, ஆலாங்கொம்பு, ராமர் கோவில், அம்மன் பழத்தோட்டம், வச்சினம்பாளையம், வேடர் காலனி, ஊமபாளையம், கல்லார் கார்டன், தூரி பாலம், ரயில்வே கேட், எஸ்.எம். நகர் வாட்டர் டேங், சமயபுரம் செக்டேம், வனபத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, பம்ப் ஹவுஸ், குண்டுகல் துறை, விளாமரத்தூர் என 19 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் யாரும் குளிக்கக்கூடாது. திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இங்கு தற்போது, அத்துமீறி குளிப்பவர்களை எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வருகின்றோம். பவானி ஆற்றில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
----