ADDED : ஆக 21, 2026 01:50 PM
கோவை: மில் ரோட்டில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் காந்திபுரம் செல்ல, அவிநாசி ரோடு பழைய ரவுண்டானா கடந்து வரும்போது தண்டுமாரியம்மன் கோயில் எதிரே இடது புறம் திரும்பி நஞ்சப்பா ரோட்டுக்கு செல்ல வழி இருந்தது; இப்போது டிவைடர்களால் தடுக்கப்பட்டு உள்ளது. அதனால், உப்பிலிபாளையம் சந்திப்பை கடந்து எல்.ஐ.சி.க்கு சென்று சிக்னலில் காத்திருந்து இடது புறம் திரும்பிச் செல்கின்றனர்.
சிக்னல் போடும் போது அரை கி.மீ.க்கு வாகனங்கள் தேங்குகின்றன. கிரீன் சிக்னல் விழுந்து அனைத்து வாகனங்களும் செல்வதற்குள் மீண்டும் ரெட் சிக்னல் விழுகிறது. அதனால், பீக் ஹவர்ஸில் 2 முறை வாகனங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. சிக்னலில் காத்திருந்து சுற்றிச் செல்ல விரும்பாதவர்கள், ஆடீஸ் வீதியை மறித்து டிவைடர் இருந்தும், குறுகலான பாதையில் விதிமீறி செல்கின்றனர். சிலர் வ.உ.சி. மைதானம் வழியாக போகின்றனர்.
‘பார்க் கேட்டில் இருந்து அவிநாசி ரோடு நோக்கி வரும் வாகனங்கள், போக்குவரத்து விதிகளை மீறி, முன்செல்லும் வாகனங்களை ஓவர்டேக் செய்கின்றன. தனியார் பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோரும் தாறுமாறாக வாகனங்களை இயக்குகின்றனர். தினமும் அவஸ்தையாக இருக்கிறது’ என்று போலீசாரும் அலுத்துக் கொள்கிறார்கள்.
எல்.ஐ.சி. சந்திப்பில் வ.உ.சி. சிலையை ஒட்டி இடதுபுறம் திரும்ப பாதை ஏற்படுத்தித்தர போலீசார் கோரியுள்ளனர். அங்கு மரமும் நெடுஞ்சாலை துறையின் வழிகாட்டி பலகையும் இருக்கிறது. மரத்தை வேரோடு பெயர்த்து வேறிடத்தில் நடலாம். வழிகாட்டி பலகையை தள்ளி வைக்கலாம். செய்தால் சிக்னலில் காத்திருக்காமல் வாகனங்கள் இடதுபுறம் திரும்பும். நெரிசலும் ஒழியும்.
