ADDED : பிப் 24, 2025 12:49 AM

கோவை; தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டியில் பெனால்டி கிக் சுற்றில் பாலக்காடு விக்டோரியா அணி, 9-8 என்ற கோல்களில் புனித தாமஸ் கல்லுாரி அணியை வென்றது.
ஸ்ரீ நாராயண குரு கல்லுாரியில், 19வது தென்னிந்திய அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி கடந்த, 21ம் தேதி துவங்கியது; இன்று நிறைவடைகிறது. ஆண்களுக்கான இப்போட்டியில், தமிழ்நாடு, கேரளா, கார்நாடகா மாநிலங்களை சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.
முதல் நாளில், ஏ.ஜே.கே., கல்லுாரி அணி, 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணியையும், விக்டோரியா கல்லுாரி அணி, 6-0 என்ற கோல்களில் எஸ்.ஆர்.எம்.வி., அணியையும், மறுநாள், ரத்தினம் கல்லுாரி அணி, 3-0 என்ற கோல்களில் தேவகிரி அணியையும் வென்றன.
மைனாரிட்டி அணி, 3-1 என்ற கோல்களில் சி.எம்.எஸ்., கல்லுாரி அணியையும், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா அணி, 2-0 என்ற கோல்களில் ஏ.ஜே.கே., அணியையும், ஸ்ரீ நாராயணகுரு கல்லுாரி அணி, 4-0 என்ற கோல்களில்ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லுாரி அணியை வெற்றி கொண்டது.
புனித தாமஸ் கல்லுாரி அணி, பாலக்காடு விக்டோரியா கல்லுாரி அணி இடையேயான போட்டி, 2-2 என்ற கோல்களில் சமனில் முடிந்தது. பின்னர், பெனால்டி கிக் சுற்றில் பாலக்காடு விக்டோரியா அணி, 9-8 என்ற கோல்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து போட்டிகள் நடந்துவருகின்றன.

