/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
படகு இல்லத்தில் கட்டணம் ஆனாலும் ரொம்ப ஓவருங்க! குறைக்க மக்கள் கோரிக்கை
/
படகு இல்லத்தில் கட்டணம் ஆனாலும் ரொம்ப ஓவருங்க! குறைக்க மக்கள் கோரிக்கை
படகு இல்லத்தில் கட்டணம் ஆனாலும் ரொம்ப ஓவருங்க! குறைக்க மக்கள் கோரிக்கை
படகு இல்லத்தில் கட்டணம் ஆனாலும் ரொம்ப ஓவருங்க! குறைக்க மக்கள் கோரிக்கை
ADDED : ஏப் 28, 2024 02:25 AM

கோவை;ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை வாலாங்குளம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் படகு இல்லத்தில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறையை குழந்தைகளுடன் குதுாகலமாக பொதுமக்கள் கழிக்க வசதியாக, கட்டணத்தை குறைக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் முன்வர வேண்டும்.
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளம் குமாரசாமி மற்றும் செல்வம்பதி குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதில் உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கைகள், நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத் திடல், உணவுக்கூடங்கள், ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
வாலாங்குளத்தில் படகு சவாரி துவங்கப்பட்டுள்ளது. பெடல் படகுகள், துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் மற்றும் சைக்கிளிங் படகுகள் இயக்கப்படுகின்றன.
பெடல் படகு, 2 பேர் செல்லும் வகையிலும், 4 பேர் செல்லும் வகையிலும் உள்ளது. துடுப்பு படகு, 4 பேர் செல்லும் வகையில் உள்ளது. மோட்டார் படகு, 8 பேர் செல்லும் வகையில் உள்ளது.
தற்போது கோடை விடுமுறை துவங்கி விட்டதால், பொதுமக்கள் குழந்தைகளுடன் படகு இல்லத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். வெயிலும் வாட்டுவதால், குளக்கரை நிழலில் மக்கள் ஆசுவாசப்படுத்தி வருகின்றனர்.
கட்டணம் அதிகம்
ஆனால், படகு இல்லத்துக்கு வரும் அனைவராலும், இங்கு படகு சவாரி செல்ல முடிவதில்லை. காரணம், இங்கு வசூலிக்கப்படும் அதிக கட்டணம்.
பெடல் படகுகளை பயன்படுத்த, 30 நிமிடங்களுக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
துடுப்பு படகிற்கு ரூ.350, மோட்டார் படகுகளுக்கு ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
படகு சவாரி செல்வோர், தாங்கள் செலுத்தும் கட்டணத்தைப்போலவே மற்றொரு மடங்கு டெபாசிட் தொகையையும் செலுத்த வேண்டும். குறித்த நேரத்திற்குள் திரும்பாவிட்டால், டெபாசிட் தொகை பிடித்தம் செய்யப்படும்.
படகு சவாரிக்கு வசூலிக்கப்படும் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும், ஊட்டி போன்ற சுற்றுலாத்தலங்களில் வசூலிக்கப்படுவதை விட, அதிகமாக இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டணம் அதிகமாக இருப்பதால், சாமானிய மக்கள் படகு சவாரி செல்ல முடிவதில்லை. கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கையை, நிறைவேற்ற தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகமும் மாநகராட்சி நிர்வாகமும் முன்வர வேண்டும்.

