/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுரங்க பாதை சாலை பயன்பாட்டிற்கு வந்தது
/
சுரங்க பாதை சாலை பயன்பாட்டிற்கு வந்தது
ADDED : செப் 08, 2024 11:41 PM

மேட்டுப்பாளையம்;கண்ணார்பாளையம் காளட்டியூர் ரயில்வே சுரங்க பாதை சாலை சீரமைக்கப்பட்டு, மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.
காரமடை அருகே கோட்டை பிரிவில் இருந்து கண்ணார்பாளையம் வரும் வழியில் காளட்டியூர் பகுதியில் ரயில்வே சுரங்க பாதை உள்ளது. இச்சாலையை பயன்படுத்தி அன்னுார், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம்.
இவ்வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மழை காலங்களில் சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், சுரங்க பாதை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக ஆனது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதையடுத்து தென்னக ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் கடந்த ஜூலை மாதம் இறுதியில் சாலை சீரமைக்கப்பு பணி துவங்கியது. சாலை சீரமைப்பின் போது சுரங்க பாதையில் நீர் தேக்காமல் இருக்க மழை நீர் வடிகால்களும் சீரமைக்கப்பட்டது. இதனால் சுரங்க பாதை வழியாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது இப்பணிகள் நிறைவடைந்து மீண்டும் சாலை மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், சுரங்க பாதை சாலை, தென்னக ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் சீரமைக்கப்பட்டது. இதற்கான பணிகள் முடிந்தது. மழைநீர் வடிகாலும் சீரமைக்கப்பட்டது, என்றார்.
---