ADDED : மே 19, 2024 11:13 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையே நீடிக்கிறது.
பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை, கிணத்துக்கடவு பகுதிகளில், இளநீர் தென்னை சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் இளநீர் பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக, இளநீர் பண்ணை விலையில் மாற்றமின்றி ஒரே விலை நிலவி வருகிறது. வரத்து குறைவால், விலை உயரும் வாய்ப்புள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையில் மாற்றம் இல்லாமல், 41 ரூபாயாகவே நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 16,500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இளநீர் வரத்து தொடர்ந்து மிக குறைவாக உள்ளது. இளநீரின் தேவை பலமடங்கு உயர்ந்துள்ளது. எனவே, இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

