/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை
/
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை
ADDED : அக் 18, 2024 10:22 PM

வால்பாறை : வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வால்பாறையில் வடகிழக்குப் பருவமழை துவங்கவுள்ள நிலையில், பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம், வால்பாறை தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பொள்ளாச்சி சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்து பேசியதாவது:
வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களையும், ஆற்றோரப் பகுதியில் வீடு கட்டி வசிக்கும் மக்களையும், பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, வால்பாறை தற்காலிக முகாமில் தங்க வைக்க வேண்டும். மழை தீவிரமடையும் நிலையில், பேரிடர்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்க தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தி, மின் இணைப்பும் தடையில்லாமல் வழங்க வேண்டும். இவ்வாறு, பேசினார்.
கூட்டத்தில், தாசில்தார் (பொ) மோகன்பாபு, நகராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.