ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் கரும்பு மகசூல் 'இனிக்கும்!' 30 சதவீதம் அதிகம் பெற அறிவுரை
ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் கரும்பு மகசூல் 'இனிக்கும்!' 30 சதவீதம் அதிகம் பெற அறிவுரை
ADDED : ஆக 13, 2026 04:27 AM

பொள்ளாச்சி: ''கரும்பு விவசாயிகள் ஏ.ஐ., தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதன் வாயிலாக, வழக்கமாக கிடைக்கும் மகசூல் அளவை விட, 30 சதவீதம் அதிகம் ஈட்டலாம்,'' என கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் இயக்குனர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
வேளாண் துறையில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள் ளது. குறிப்பாக, கரும்பு விவசாயிகளுக்கு ஏ.ஐ., ஒரு வரப்பிரசாதமாக மாறி விட்டது என்கிறார் அவர்.
நமது நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
கரும்பு பயிர்களை தாக்கும் பூச்சி விவரங்களை விவசாயிகளுக்கு ஏ.ஐ.,சென்சார் வாயிலாக அறிவித்து விடுகிறது. உதாரணமாக, ஒரு ஏக்கர் கரும்பு பயிரில் ஏதாவது நான்கு பயிரில் பூச்சி தாக்குதல் இருந்தால் கூட, அதை அறிந்து அலர்ட் செய்து விடுகிறது.
என்ன மாதிரியான பூச்சி தடுப்பு மேலாண்மையை பின்பற்ற வேண்டும் என்பதையும் சொல்லி விடுவதால், அதை பின்பற்றி பூச்சி தாக்குதலை தடுத்து விட முடியும்.
நிலத்தின் ஈரப்பதத்தையும் துல்லியமாக தெரிவிப்பதால், சரியான நேரத்தில், சரியான அளவு தண்ணீரை பாசனத்துக்கு பயன் படுத்தலாம்.
தண்ணீர் அதிகமானாலும், குறைந்தாலும் மகசூல் குறையும் என்பதால், இந்த தொழில்நுட்பம் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது.
அதே போல், பயன்படுத்த வேண்டிய உரம் அளவையும் சரியாக தெரிவித்து விடுகிறது. அளவான நீர், அளவான உரம் பயன்படுத்தும் போது, விவசாயிகளுக்கு, 35 சதவீதம் செலவு குறைகிறது. இதனால் வழக்கமாக கிடைக்கும் மகசூல் அளவை விட, 30 சதவீதம் கூடுதல் மகசூல் பெறலாம்.
ஏ.ஐ., தொழில்நுட்பம் செய்யும் மேஜிக் அறிந்து கொண்ட விவசாயிகள் பலர், கரும்பு விவசாயத்தை வெற்றிகரமாக செய்து வருகின்றனர். அறியாத விவசாயிகளும் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
