/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை தாக்கம் குறைந்ததும்; கொசு ஒழிப்பு பணி தீவிரம்
/
மழை தாக்கம் குறைந்ததும்; கொசு ஒழிப்பு பணி தீவிரம்
ADDED : ஜூலை 28, 2025 09:15 PM

பொள்ளாச்சி; மழையின் தாக்கம் குறைந்துள்ளதால், நகராட்சியில் டெங்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கொசு ஒழிப்பு பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில், கனமழைக்கு ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. தற்போது, மழை பொய்வது குறைந்ததால், கொசு ஒழிப்பை தீவிரபடுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு வார்டிலும் கொசு ஒழிப்பில் ஈடுபட துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள், தினமும் காலை முதல் மதியம் வரை, அந்தந்த வார்டுகளில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் செல்கின்றனர்.
வீட்டின் முன்பாக இருக்கும் பழைய டயர், தேங்காய் தொட்டி, ஆட்டுக்கல் ஆகியவற்றில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் டெங்கு கொசுக்கள் வளராத வகையில், 'அபேட்' மருந்து கரைசல் ஊற்றுகின்றனர். மேலும், கொசு உற்பத்தி ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, வீட்டு உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
நகராட்சி சுகாதாரத்துறையினர் கூறியதாவது:
துாய்மை பணியாளர்கள் வாயிலாக, வழக்கம்போல் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழையால், குடியிருப்பு பகுதியில் செடிகள், முட்புதர்கள் அதிகளவு வளர்ந்துள்ளதால், அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குடியிருப்பு வளாகங்களில் உள்ள செடிகளை அப்புறப்படுத்த, இடத்தின் உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டால், மருத்துவமனைகளுக்கு சென்று, டாக்டரிடம் உரிய பரிசோதனை செய்து மருந்துகளை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.

