ADDED : ஜூன் 05, 2025 01:08 AM

மேட்டுப்பாளையம்; காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட மஞ்சூர் சாலையில் கரடி உலா வருகிறது. வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் காரமடையில் இருந்து வெள்ளியங்காடு வழியாக குண்டூர், முள்ளி, மஞ்சூர், கெத்தை, பில்லூர் அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது.
கோவை மாவட்டத்தில் இருந்து ஊட்டிக்கு செல்ல மூன்றாவது வழியாக உள்ளதால், இச்சாலையில் சுற்றுலா பயணிகள், மஞ்சூர் வழியாக ஊட்டி செல்லும் உள்ளூர் மக்கள் என தினமும் பல நூறு வாகனங்கள் இவ்வழியாக செல்கின்றன. இதனிடையே நேற்று இச்சாலையில் கெத்தையில் இருந்து மஞ்சூர் செல்லும் வழியில் கரடி ஒன்று உலா வந்தது. இதனை வாகன ஓட்டிகள் கண்டு வியப்படைந்தனர்.
இது குறித்து காரமடை வனத்துறையினர் கூறுகையில், இச்சாலை அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே செல்வதால், வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும்.
வனத்துறையினர் 24 மணி நேரமும் ரோந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகள் வழியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. வழியில் வனவிலங்குகளை கண்டால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்றனர்.---