ADDED : ஏப் 24, 2025 10:27 PM
கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு, மானிய விலையில் சோளம் விதை தயார் நிலையில் உள்ளது, என, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், ஆண்டு தோறும், 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. தேசிய உணவு ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், 50 சதவீதம் மானிய விலையில், விவசாயிகளுக்கு சோளம் விதை வழங்கப்பட உள்ளது.
தற்போது, 3 டன் அளவில் சோளம் விதை 'கோ 32' மற்றும் 'கே 12' ரகம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மானிய விலையில் சோளம் விதையை பெற, ஆதார் கார்டு மற்றும் சிட்டா கொண்டு பதிவு செய்து, பெற்று கொள்ளலாம். மேலும், ஒரு விவசாயிக்கு, 30 கிலோ வரை சோளம் விதை வழங்கப்படும்.
'கோ 32' மற்றும் 'கே 12' ரக சோளம் 5 முதல் 6 அடி வரை வளரக்கூடியது. இது மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது. இப்பயிரை, தானியமாகவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தலாம்.
இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) அருள்கவிதா மற்றும் வேளாண் துணை அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.
