ADDED : ஜூன் 11, 2025 09:48 PM
நகை, பணம் திருட்டு
கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயராமன், 75. இவர் தனது மனைவியுடன் கவுண்டம்பாளையம், சரவணா நகரில் வசித்து வருகிறார். கடந்த 7ம் தேதி உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக சென்னை சென்றிருந்தார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திரும்பி வந்த போது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் வைத்திருந்த 1.5 சவரன் தங்க நகை, ரூ. 20 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது. சம்பவம் குறித்து, கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
செல்போன் பறித்தவர் கைது
சரவணம்பட்டியை சேர்ந்தவர் வினயா, 22; ஐ.டி., ஊழியர். இவர் கடந்த 9ம் தேதி சரவணம்பட்டி பகுதியில் தனது நண்பரை சந்திக்க, நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நபர் ஒருவர், வினயாவின் மொபைலை பறித்து சென்றார். வினயா அளித்த புகாரில் சரவணம்பட்டி போலீசார், விசாரித்ததில், மொபைல் பறிப்பில் ஈடுபட்டது அத்திபாளையத்தை சேர்ந்த வசந்தகுமார், 20 என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கார் மோதி ஒருவர் பலி
பி.என்.புதுார், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கோயில்ராஜ், 51. இவர் நேற்று முன்தினம், தடாகம் ரோட்டில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுபாட்டை இழந்து கோயில்ராஜ் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் அவர் சாலையில் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
3 நம்பர் லாட்டரி விற்ற இருவர் கைது
சாய்பாபா காலனி பகுதியில் 3 நம்பர், 5 நம்பர் லாட்டரி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, இடையர்பாளையத்தை சேர்ந்த ஜான்சன், 46 மற்றும் கருப்புசாமி, 48 ஆகியோர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து, விசாரிக்கின்றனர்.