ADDED : ஜூன் 17, 2025 11:06 PM
உண்டியல் பணம் திருட்டு
கோவைப்புதுாரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 42. கோவைப்புதுார் பால விநாயகர், முருகன், ஐயப்பன் கோவில் துணை செயலாளராக உள்ளார். கடந்த 15ம் தேதி இரவு கோவிலை பூட்டி விட்டு வீட்டு சென்றார். மறுநாள் காலை கோவிலை திறக்க வந்த போது, கோவில் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்தது. அவர் குனியமுத்துார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது, திருட்டில் ஈடுபட்டது காரைக்காலை சேர்ந்த சின்னையன், 42 என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
கோவை, எல்லைத்தோட்டம், பாலகுரு கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 52; தண்ணீர் பந்தல் சாலையில் உள்ள, கம்பெனியில் வெல்டராக பணியாற்றி வந்தார். கடந்த 15ம் தேதி வழக்கம் போல், வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அருகில் இருந்த கம்பியை பிடித்த போது, மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விளம்பர பலகை வைத்தவர் மீது வழக்கு
காட்டூர் போலீசார், காந்திபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிராஸ் கட் ரோட்டில் உள்ள ஒரு தங்க நகைக்கடை முன், அனுமதியின்றி மின்விளக்குகள் பொருத்தப்பட்ட விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்ததை பார்த்தனர். விளம்பர பலகை வைக்க, எவ்வித அனுமதியும் பெறாத காரணத்தால், நகைக்கடை நிர்வாகியான செல்வபுரத்தை சேர்ந்த பால விக்னேஷ், 23 மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சட்ட விரோத மது விற்பனை
சரவணம்பட்டி பகுதியில் அரசு அனுமதித்த நேரத்தை மீறி, 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதாக, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது, காலை 9:00 மணிக்கே சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது தெரியவந்தது. மது விற்பனையில் ஈடுபட்டிருந்த, புதுக்கோட்டையை சேர்ந்த முருகானந்தன், 25 என்பவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 81 பாட்டில்கள், ரூ. 4700 பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.