/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணபதியில் ரோட்டை அகலப்படுத்த ரூ.54 கோடி; உள்ளூர் திட்ட குழுமத்திடம் கேட்கிறது மாநகராட்சி
/
கணபதியில் ரோட்டை அகலப்படுத்த ரூ.54 கோடி; உள்ளூர் திட்ட குழுமத்திடம் கேட்கிறது மாநகராட்சி
கணபதியில் ரோட்டை அகலப்படுத்த ரூ.54 கோடி; உள்ளூர் திட்ட குழுமத்திடம் கேட்கிறது மாநகராட்சி
கணபதியில் ரோட்டை அகலப்படுத்த ரூ.54 கோடி; உள்ளூர் திட்ட குழுமத்திடம் கேட்கிறது மாநகராட்சி
ADDED : டிச 28, 2024 12:30 AM

கோவை; கணபதி பஸ் ஸ்டாப்பில் இருந்து, சூர்யா மருத்துவமனை வரை இருபுறமும் ரோட்டை அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேவையான நிலம் கையகப்படுத்த, உள்ளூர் திட்டக்குழும நிதியில் இருந்து, 54 கோடி ரூபாயை, மாநகராட்சி எதிர்பார்க்கிறது.
கோவையின் வடக்கு பகுதியான சின்ன வேடம்பட்டி, சரவணம்பட்டி, குருடம்பாளையம், அன்னுார் சுற்றுவட்டார பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. பள்ளி, கல்லுாரிகள், குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் பெருகி விட்டன.
இதில், கணபதி பஸ் ஸ்டாப் சந்திப்பில், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. காந்திபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள், கோபால்சாமி கோவில் வீதி மற்றும் சத்தி ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் கணபதியில் சந்திக்கின்றன. அப்பகுதி குறுகலாக இருப்பதால், வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இதற்கு தீர்வு காண, டெக்ஸ்டூல் பாலம் முதல் சூர்யா மருத்துவமனை திருப்பம் வரை ரோட்டை விஸ்தரிக்க திட்டமிடப்பட்டது. இதற்கு ரோட்டின் இருபுறமும் தலா மூன்று மீட்டர் அகலப்படுத்த, கட்டட உரிமையாளர்களுக்கு, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு நோட்டீஸ் வழங்கியது.
ரோட்டின் இருபுறமும் தனியார் நிலங்களை கையகப்படுத்துவது மற்றும் சத்தி ரோட்டில் மூன்று சாலை சந்திப்பு பகுதியை அபிவிருத்தி செய்ய, கோவை உள்ளூர் திட்ட குழும நிதியில், 38 கோடியே, 64 லட்சத்து, 81 ஆயிரத்து, 827 ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிதி, 2020ல் ஒதுக்கப்பட்டது.
இப்பணியின் அவசியத்தை தொடர்ந்து, எம்.பி., ராஜ்குமார் தலைமையில் கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் நகரமைப்பு பிரிவினர், நெடுஞ்சாலைத்துறையினர் கள ஆய்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து, மேலும், 15 கோடியே, 35 லட்சத்து, 18 ஆயிரத்து, 173 ரூபாய் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தமாக, உள்ளூர் திட்ட குழும நிதியில் இருந்து, 54 கோடி ரூபாயை, மாநகராட்சி எதிர்பார்க்கிறது.
இத்தொகையை பெற்று, மாநகராட்சி மூலமாக நிலம் கையகப்படுத்திய பின், டெக்ஸ்டூல் பாலம் முதல் சரவணம்பட்டி வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை ரோடு போட முடிவு செய்திருக்கிறது.

