
மின் மோட்டார் திருடிய இருவர் கைது
தோட்டங்களில் மின்மோட்டார் திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த பிப்ரவரியில் மூக்கனூர் பகுதியில் தோட்டம் மற்றும் வீடுகளில் மின் மோட்டார் தொடர்ந்து திருட்டு போனது. இது குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், குப்பனூர் அருகே எம். ஜி.ஆர்., நகரை சேர்ந்த கருப்புசாமி, 44. அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன், 29. ஆகிய இருவரும் சேர்ந்து மின் மோட்டார்களை திருடியது தெரிய வந்தது. போலீசார் அவர்களிடம் இருந்து மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.
இருவரும், அன்னூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
பசு மாடுகள் திருடிய சகோதரர்கள் கைது
மாடுகளை திருடி, தூத்துக்குடியில் வளர்த்து வந்த இரு சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 40. கடந்த, 10 ம்தேதி இரவு, இவரது வீட்டில் கட்டியிருந்த, முன்று பசுமாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அவர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு, குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், சோமனூர் ஆத்துப் பாளையத்தில் தங்கி ஐஸ் வியாபாரம் செய்து வந்த, தூத்துக்குடியை சேர்ந்த சகோதரர்கள் யோவான், 28, முத்து, 27, ஆகியோர், ஐஸ் வியாபாரம் செய்யும் போது நோட்டமிட்டு வந்து, கடந்த, 10 ம்தேதி சரக்கு ஆட்டோவில், மூன்று பசு மாடுகளை திருடி சென்றது தெரிந்தது.
மாடுகளை தூத்துக்குடி கொண்டு சென்று வளர்த்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், இருவரையும் கைது செய்தனர். பசுமாடுகள் மற்றும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
சின்னத்தடாகம், இந்திரா நகர் பாலம் அருகே பள்ளத்தில் அழுகிய நிலையில் முகம் மற்றும் கை பகுதிகளில் காயம் ஏற்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இது குறித்து, தடாகம் போலீஸ் எஸ்.ஐ., ரவி, சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். இதில், இறந்தவர் உடலில் காட்டுப்பன்றி அல்லது நாய் கடித்ததற்கான அடையாளம் தெரிந்தது. நீல கலர் சட்டையும், கருப்பு கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இது குறித்து, தடாகம் போலீசார் கூறுகையில், ' சடலத்தை கைப்பற்றி, கூராய்வு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பிறகு மரணத்துக்கான காரணம் தெரியவரும்' என்றனர்.
கிராவல் மண் கடத்திய இருவருக்கு சிறை
சுல்தான்பேட்டை அடுத்த சின்ன கம்மாளப்பட்டி அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்தனர். முறையான அனுமதி இன்றியும், ஆவணங்கள் இல்லாமலும், சட்டவிரோதமாக லாரியில் கிராவல் மண் கடத்தி செல்வது தெரிந்தது. இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையை சேர்ந்த நாகராஜ், 45, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை சேர்ந்த கண்ணதாசன், 26 ஆகிய இரு டிரைவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளர் அரவிந்தை தேடி வருகின்றனர்.
கொள்ளையர்களை பிடிக்க கூடுதல் தனிப்படை
கோவை மாவட்டம் காரமடை அன்னை வேளாங்கண்ணி நகரில் மரக்கடை உரிமையாளரின் வீட்டில், கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 20 பவுன் தங்க நகை திருடு போனது. அதே போல் மேட்டுப்பாளையம் மற்றும் காரமடையில் உள்ள வேறு 2 வீடுகளில் மொத்தம் ரூ.1 லட்சத்திற்கு மேல் கொள்ளை போனது.
இச்சம்பவங்கள் குறித்து போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தற்போது கூடுதலாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, போலீசார் கூறுகையில், கொள்ளையர்களை விரைந்து பிடித்துவிடுவோம். வெளிமாநிலங்களிலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது, என்றனர்.--