/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணுவாய் பகுதியில் நிலத்தடி நீருக்கு ஆபத்து:தடுக்க தேவை உடனடி நடவடிக்கை
/
கணுவாய் பகுதியில் நிலத்தடி நீருக்கு ஆபத்து:தடுக்க தேவை உடனடி நடவடிக்கை
கணுவாய் பகுதியில் நிலத்தடி நீருக்கு ஆபத்து:தடுக்க தேவை உடனடி நடவடிக்கை
கணுவாய் பகுதியில் நிலத்தடி நீருக்கு ஆபத்து:தடுக்க தேவை உடனடி நடவடிக்கை
ADDED : ஜன 30, 2024 10:20 PM

பெ.நா.பாளையம்:கோவை அருகே உள்ள கணுவாய் தடுப்பணையில் குப்பைகளை கொட்டுவதால் சுற்றுச்சூழல்
பாதித்து, நிலத்தடி நீர் மாசுபடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க,
அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
தடாகம் வட்டாரத்தில் பருவ காலங்களில் பெய்யும் மழை நீர், வெள்ளமென பெருகி, பெரிய பள்ளத்தில் வழிந்தோடி, சோமையம்பாளையம் தடுப்பணையை தாண்டி, கணுவாய் மேல் கீழ் தடுப்பணையை நிறைக்கிறது.
கணுவாய் கீழ் தடுப்பணையில் நிறையும் மழை நீரின் ஒரு பகுதி, சின்னவேடம்பட்டி ராஜவாய்க்காலில் பயணித்து வெள்ளக்கிணறு குளத்தை நிறைத்து, பின்னர் சின்னவேடம்பட்டி ஏரியை அடைகிறது. கணுவாய் தடுப்பனையிலிருந்து வழிந்து செல்லும் நீர், சங்கனூர் பள்ளம் வழியாக கோவை மாநகருக்குள் பயணிக்கிறது.
மீண்டும் குப்பை
சில மாதங்களுக்கு முன்பு பெய்த பருவ மழையால், கணுவாய் மேல், கீழ் தடுப்பணைகள் நிறைந்து, வெள்ளம் வழிந்து ஓடியது. தற்போது, தடுப்பணைகள் வற்றிய நிலையில் காணப்படுகின்றன. இப்பகுதியில் தற்போது, குறிப்பாக, கணுவாய் கீழ் தடுப்பணை பகுதியில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை கொண்டு வந்து குவிக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
இது குறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்,'சுமார், 100 ஏக்கர் பரப்பளவு உள்ள கணுவாய் கீழ் தடுப்பணையில் பருவ மழைக்கு முன்னரே, ஏராளமான குப்பைகளை இப்பகுதியில் உள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் கொண்டு வந்து கொட்டி சென்றன. இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சமீபத்தில் பெய்த மழையால் குப்பைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தூய்மையான நிலையில் இருந்த கணுவாய் கீழ் தடுப்பணையில் மீண்டும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டும் பணி துவங்கி உள்ளது.
நிலத்தடி நீருக்கு ஆபத்து
இங்கு தேங்கும் மழை நீரால் பன்னிமடை, சோமையம்பாளையம், கோவை மாநகராட்சியின் துடியலூர் அப்பநாயக்கன்பாளையம் பகுதிகள், நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் பெருகும்.
இதனால் திறந்த வெளி கிணறுகளிலும், ஆழ்குழாய் கிணறுகளிலும் நிலத்தடி நீர் பெருகி, விவசாயம் செழிக்கும். தற்போது கணுவாய் கீழ் தடுப்பணையில் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டும் போக்கு மீண்டும் அதிகரித்து உள்ளதால், இப்பகுதி நிலத்தடி நீருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை போர்க்கால அடிப்படையில் தடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்' என்றனர்.