தொழிலாளர் பற்றாக்குறை அதிகரிப்பு நாளுக்கு நாள்...! தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி
தொழிலாளர் பற்றாக்குறை அதிகரிப்பு நாளுக்கு நாள்...! தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி
UPDATED : மே 03, 2026 03:46 PM
ADDED : மே 03, 2026 03:40 PM
அன்னுார்: அன்னுார் தாலுகாவில் தொழிலாளர் பற்றாக்குறையால் தொழில் நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன.
அன்னுார் தாலுகாவில், கரியாம்பாளையம், கணேசபுரம், குன்னத்துார், பொன்னே கவுண்டன்புதுார், குப்பேபாளையம், பிள்ளையப்பம்பாளையம் உட்பட பகுதிகளில் அதிக தொழில் நிறுவனங்கள் உள்ளன. குறிப்பாக 3,000 ஸ்பிண்டில் திறன் முதல் 50,000 ஸ்பிண்டில் திறன் வரை உள்ள 60 ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. இத்துடன், 50 பவுண்டரிகள் உள்ளன. ஸ்டீல் ரோலிங் மில்கள், இன்ஜினியரிங் தொழிற்சாலைகள், விசைத்தறிகள் என, 500க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன.
கடந்த சில மாதங்களாக விடுமுறைக்கு என புறப்பட்டு செல்லும் வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்புவதில்லை. இதனால் கடும் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. கரியாம்பாளையம் பகுதியை சேர்ந்த இன்ஜினியரிங் தொழிற்சாலை நிர்வாகிகள் கூறுகையில், 'பத்தாம் வகுப்பு படித்த இளைஞர்கள் எவ்வளவு பேர் வந்தாலும், அன்னுார் கோவில்பாளையம் பகுதியில் வேலைக்கு எடுத்துக் கொள்ளும் அளவுக்கு இன்ஜினியரிங் தொழிற்சாலைகளில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்காக ஒவ்வொரு மாதமும் சில ஊர்களில் சிறப்பு முகாம் நடத்துகிறோம். எனினும் மெஷின் ஆபரேட்டர், சி.என்.சி., ஆப்பரேட்டர், எலக்ட்ரீசியன் உட்பட பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை' என்றனர். இதே போல், மைல்கல் பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில்களில் பணிபுரியவும் போதிய தொழிலாளர்கள் இல்லை.
இதுகுறித்து, அன்னூரில் உள்ள ஐ.டி.ஐ., நிர்வாகிகள் கூறுகையில், 'பல தொழில் நிறுவனங்கள் ஐ.டி.ஐ., தேர்வு முடியும் முன்னரே, ஐ.டி.ஐ., படித்து வரும் மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் மொபைல் எண்ணை பெற்று, அவர்களை தங்கள் நிறுவனங்களுக்கு வரவழைக்கின்றனர். தொழிலாளர்களுக்கு அதிக தேவை உள்ளது' என்றனர்.
இத்துடன் பிற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை கமிஷனுக்கு வேலைக்கு சேர்த்து விடும் மீடியேட்டர்களுக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
ஒருவரை வேலைக்கு சேர்த்து அவர் தொடர்ந்து மூன்று மாதங்கள் பணி புரிந்தால், அவரது சம்பளத்தில் ஒரு மாத சம்பளத்தை கமிஷனாக தரவும் சில தொழில் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. தொழிலாளர் பற்றாக்குறையால், அன்னுார் தாலுகாவில் பல தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிக்க முடியாமல் தவிக்கின்றன.
