/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தர்மலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
தர்மலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஜூலை 10, 2025 11:06 PM

போத்தனுார்; கோவை, மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.
மதுக்கரை மரப்பாலம் அருகேயுள்ள இக்கோவிலில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த, 7ம் தேதி கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று முன்தினம் திருப்பள்ளி எழுச்சி, நினைவுத் திருமஞ்சனம், இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு, திருமுறை, நாட்டிய விண்ணப்பம் உள்ளிட்டவை நடந்தன. நேற்று காலை, மூல மூர்த்திகளுக்கு ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், நான்காம் கால வேள்வி, திருக்குடங்கள் புறப்பாடு உள்ளிட்டவை நடந்தன.
தொடர்ந்து காலை, 8:30 மணிக்கு மேல் ராஜகோபுரம், விமானங்கள், பரிவாரங்கள், மூல மூர்த்திகள் ஆகியவற்றுக்கு கும்பாபிஷேகத்தை, மணிவாசகர் அருட்பணி மன்ற அறக்கட்டளை செயலாளர் குமரலிங்கம் நடத்தி வைத்தார். இதையடுத்து பதின்மங்கல காட்சி, பெருந்திருமஞ்சனம், பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் உள்ளிட்டவை நடந்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேலும் நேற்று பவுர்ணமி முன்னிட்டு திரளான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சந்தியா, தக்கார் நாகராஜன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

