ADDED : ஆக 21, 2026 02:00 PM
கோவை: பார்வை, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இலவச மொபைல்போன் வழங்கப்படுகிறது. கல்லுாரி மாணவர்கள், வேலை தேடும் பட்டதாரிகள், சுயதொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகள் இதை பெற தகுதியானவர்கள்.
மொபைல் போன் கேட்டு விண்ணப்பித்து, நேர்முகத் தேர்வு முடித்து ஓராண்டாகியும் பலருக்கும் இதுவரை வழங்கவில்லை. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு நேரில் சென்று, அதிகாரிகளிடம் முறையிட்டால் மட்டுமே வழங்கப்படுவதாக கூறுகின்றனர்.
”அடையாள அட்டை, உதவித்தொகை கேட்டு மாவட்ட அலுவலகத்திற்கு வரும்போது, கழிப்பறையை பயன்படுத்த முடியாதபடி பூட்டி விடுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லும் வகையில் நடைபாதை வசதி இருக்க வேண்டும். ஆனால், நடைபாதையில் பேவர் பிளாக் கற்கள் முறையாக பதிக்கப்படாததால், கால் இடறுகிறது” என ஒருவர் கூறினார்.
மற்றொருவர், ”பார்வையற்றவர்களுக்கு ஸ்டிக், கண்ணாடி உள்ளிட்ட உதவி உபகரணங்களை பெற ஆன்லைன் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்குமாறு கூறுகின்றனர். அந்த மையங்களில் எப்போதும் கூட்டமாக இருப்பதால், இன்னொரு நாள் வருமாறு கூறுகின்றனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அல்லது ஒருங்கிணைந்த சேவை மையங்களில் இதற்கென ஆட்களை நியமித்தால், பஸ் பாஸ் போன்ற தேவைகளுக்கு எளிதாக விண்ணப்பிக்க முடியும்” என்றார்.
