/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிரைவர் அடித்து கொலை: தனியார் காவலாளி கைது
/
டிரைவர் அடித்து கொலை: தனியார் காவலாளி கைது
ADDED : நவ 07, 2025 09:18 PM
பெ.நா.பாளையம்: டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தனியார் நிறுவன காவலாளி கைது செய்யப் பட்டார்.
கோவை மாவட்டம், சின்னதடாகம் அருகே கோவை-ஆனைகட்டி ரோட்டில் உள்ள செங்கல் சூளையில் தலையில் ரத்தம் உறைந்த நிலையில் கடந்த, 3ம் தேதி வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
சம்பவம் குறித்து செங்கல் சூளை உரிமையாளர் பிரதீப் கண்ணன், தடாகம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி கூராய்வு பரிசோதனை நடத்தியதில், தலையின் இடது பக்கத்தில் கடுமையாக தாக்கியதில் மண்டையோடு உடைந்து, இறப்பு நேர்ந்துள்ளது என மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இவ்வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணையை துவக்கினர். இதில் கொலை செய்யப்பட்ட நபர் சின்னதடாகத்தைச் சேர்ந்த ராகவன்,36, டிரைவர் என, தெரியவந்தது.
விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு, நல்லாம்பாளையத்தில் உள்ள மதுபான கடையில் ராகவன் மது அருந்திய போது, அங்கு மது அருந்திய தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி வேலை பார்க்கும் சரவணன்,45, பழக்கம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று ராகவன் மற்றும் சரவணன் ஆகியோர் தடாகம் தண்ணீர் பந்தல் அருகே உள்ள செங்கல் சூளையில் மது அருந்த அமர்ந்தனர். அப்போது மது பானத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சரவணன், செங்கல் சூளையில் இருந்த பச்சை செங்கற்களை எடுத்து ராகவனின் தலையில் தாக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த ராகவன், மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். சரவணன் அங்கிருந்து தப்பிச் சென்றார். தடாகம் போலீசார் 'சிசிடிவி' உதவியோடு சரவணனை கைது செய்தனர்.

