/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மெட்டுவாவி சிப்காட்டை எதிர்த்து விவசாயிகள் மனு
/
மெட்டுவாவி சிப்காட்டை எதிர்த்து விவசாயிகள் மனு
ADDED : பிப் 01, 2025 02:02 AM

கிணத்துக்கடவு:மெட்டுவாவி சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்து முறையிட்டனர்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுகா, மெட்டுவாவி பகுதியில், 1,500 ஏக்கரில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்க, அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக விளை நிலங்களை கையப்படுத்த, 'ட்ரோன்' வாயிலாக இரவு நேரத்தில் அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை கலெக்டர் தலைமையில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மனு அளித்தனர்.
அவர்கள் கூறியதாவது:-
மெட்டுவாவி பகுதியில் விவசாயம் மட்டுமின்றி, பட்டுப்பூச்சி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழிப்பண்ணை, பால் பண்ணை தொழில்களும் செய்து வருகிறோம். இங்கு தொழிற்பேட்டை அமைத்தால், விவசாய நிலங்கள் பாழாகும். விவசாய நிலங்கள் பறிபோகும். விவசாயிகளின் வாழ்வாதாரமும், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படும். திட்டத்தை இங்கு செயல்படுத்தக்கூடாது.
இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் கிராந்திகுமார், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.