/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனி குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு
/
தனி குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு
ADDED : பிப் 14, 2026 05:19 AM
மேட்டுப்பாளையம்: -: நிதி இல்லாமல் செயல்படாமல் இருந்த, பெள்ளேபாளையம் ஊராட்சி குடிநீர் திட்டத்துக்கு, தினமலர் செய்தியால், 28.90 லட்சம் ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சிறுமுகை பேரூராட்சி அருகே உள்ள, பெள்ளேபாளையம் ஊராட்சியில், 12 வார்டுகள் உள்ளன. மூளையூர் குடிநீர் திட்டத்தில் இருந்து, தினம் எட்டு லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.
இதை, 12 வார்டுகளுக்கும் பகிர்ந்து கொடுக்கும் போது, பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பவானி ஆறு அருகே இருந்தும், போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த ஊராட்சிக்கு என, தனி குடிநீர் திட்டம் அமைக்க மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக, ஆலாங்கொம்பில் பவானி ஆற்றில், நான்கு மீட்டர் விட்டம் கொண்ட, நீர் உறிஞ்சும் கிணறு அமைக்கப்பட்டது. ஆலாங்கொம்பில் இருந்து, எலகம்பாளையம் வரை குழாய் பதிக்கப்பட்டது. பவானி ஆற்றின் ஓரத்தில் தண்ணீரை தேக்கி வைக்க நிலமட்ட தொட்டியும் கட்டப்பட்டுள்ளது.
பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு என, 50.40 லட்சம் ரூபாய் செலவில் அமைத்த தனி குடிநீர் திட்டம், இரண்டு ஆண்டுகள் ஆகியும், இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
தனி குடிநீர் திட்டத்துக்கு எலகம்பாளையம் பவானி ஆறு அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், மின் இணைப்பு பெறவும் போதிய நிதி இல்லாததால், கடந்த ஒன்றரை ஆண்டாக செயல்படாமல் இருந்தது.
இது குறித்து நமது நாளிதழில் ஜன., 23ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், மின் இணைப்பு பெறவும், தமிழக அரசு, 28.90 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இதன் அடிக்கல் நாட்டு விழா எலகம்பாளையத்தில் நடந்தது. ஊராட்சி முன்னாள் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் காரமடை வடக்கு ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

