/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரவுடிகளின் கொட்டத்தை அடக்க 'குண்டாஸ்!' 15 நாட்களில் 11 பேர் மீது பாய்ந்தது
/
ரவுடிகளின் கொட்டத்தை அடக்க 'குண்டாஸ்!' 15 நாட்களில் 11 பேர் மீது பாய்ந்தது
ரவுடிகளின் கொட்டத்தை அடக்க 'குண்டாஸ்!' 15 நாட்களில் 11 பேர் மீது பாய்ந்தது
ரவுடிகளின் கொட்டத்தை அடக்க 'குண்டாஸ்!' 15 நாட்களில் 11 பேர் மீது பாய்ந்தது
ADDED : மார் 25, 2025 11:17 PM

கோவை : மாநகரில் சுற்றித்திரியும் ரவுடிகளின்அட்டகாசத்தை ஒழிக்கும் வகையில், கடந்த 15 நாட்களில் 11 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து உள்ளது.
கோவை மாநகர பகுதகளில் 'ஏ'பிளஸ், ஏ,பி மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் செய்யும் நபர்கள் என சுமார், 750 ரவுடிகள் உள்ளனர். இவர்கள், மாநகர பகுதிகளில் பொது மக்களின் அமைதியை கெடுக்கும் வகையில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி, கொலை, கொலை மிரட்டல், திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில், ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாநகரில் குற்றச்சம்பவங்களை குறைக்க, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பொறுப்பேற்ற பிறகு, ரவுடிகளை மாநகரை விட்டு வெளியேற்றும் திட்டத்தை கொண்டு வந்தார்.
அதன் மூலம், கடந்த ஜன., 13ம் தேதி முதல் கட்டமாக, 27 ரவுடிகளை மாநகரில் இருந்து வெளியேற உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக பிப்., 7ம் தேதி மேலும் 83 பேர் என மொத்தம் 110 பேர் மாநகரில் இருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையில், இந்த உத்தரவை எதிர்த்து, இரண்டு ரவுடிகள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மாநகரில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்கள், சிறுவர், சிறுமியருக்கு எதிராக பாலியல் குற்றங்கள் செய்து, போக்சோ வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.
11பேர் மீது 'குண்டாஸ்'
ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், பிற ரவுடிகளை எச்சரிக்கும் வகையிலும் கடந்த மார்ச் 11ம் தேதி முதல் நேற்று (மார்ச் 25) வரை 11ரவுடிகள், போக்சோ குற்றவாளிகள் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தரிடம் கேட்டபோது, ''மாநகர பகுதிகளில் கஞ்சா, புகையிலை, போதை மாத்திரை, சிந்தடிக் டிரக் உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம், பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் போதைப்பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை, தேடி பிடித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நபர்கள், தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மாநகரை அமைதியாக மாற்ற வேண்டும்.
'கிளீன்' கோவையாக மாற்றும் முயற்சியாகவே, தொடர் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்படுகிறது. மாநகர பகுதியில், போதைப்பொருட்கள் விற்பனை, குற்றச்செயல்கள் மற்றும் போக்சோ குற்றங்களில், தொடர்ந்து ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.