/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருடாந்திர 'பாஸ்டேக் பாஸ்' பயன்படுத்துவது எப்படி?
/
வருடாந்திர 'பாஸ்டேக் பாஸ்' பயன்படுத்துவது எப்படி?
ADDED : ஜூன் 21, 2025 01:10 AM
ரூ. 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி, வருடாந்திர 'பாஸ்டேக் ' வாங்கி கொண்டால், 200 தடவை டோல்கேட்டை கடந்து சென்று வரலாம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள், சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். கட்டணத்தை வசூலிக்க 'பாஸ்டேக்' திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தை எளிதாக்கி புதிய சலுகையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அறிமுகப்படுத்த உள்ளது.
வரும், ஆக., 15 ம்தேதி முதல்,3 ஆயிரம் ரூபாயக்கு வருடாந்திர பாஸ் அறிமுகமாக உள்ளது. இந்த பாஸ் செயல்பாட்டுக்கு வரும் நாளில் இருந்து ஒராண்டுக்கு செல்லுபடியாகும். அல்லது, 200 முறை டோல்கேட்டுகளை கடந்து செல்லலாம். இதில், எது அதிகமோ அதுவரை பாஸ் செல்லுபடியாகும்.
வணிக நோக்கமில்லாத தனியார் வாகனங்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கார்கள், ஜீப்கள், வேன்களுக்கு இது பயன் அளிக்கும். இந்த பாஸ் வாயிலாக நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்டை கடந்து செல்லலாம்.
இந்த பாஸை பெறவும், புதுப்பிக்கவும், ராஜ் மார்க் யாத்திரா செயலி மற்றும் என்.எச்.ஏ.ஐ., என்ற இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இணையதளங்களில் விண்ணப்பித்து பெறலாம்.
ஏற்கனவே பாஸ்டேக் வைத்திருப்போர், புதிய பாஸ் டேக் வாங்க வேண்டியது இல்லை. ஆக., 15 க்குப்பின் பழைய பாஸ் டேக்கை கொண்டு, வருடாந்திர பாஸ் டேக் முறைக்கு புதுப்பித்து கொள்ளலாம். புதிய நடைமுறை கட்டாயம் அல்ல. விருப்பம் உள்ளோர் புதிய நடைமுறைக்கு மாறி பயன் பெறலாம்.