/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிகளில் மாணவர்கள் உடனடி சேர்க்கை; பள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஆசிரியர்கள் தீவிரம்
/
அரசு பள்ளிகளில் மாணவர்கள் உடனடி சேர்க்கை; பள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஆசிரியர்கள் தீவிரம்
அரசு பள்ளிகளில் மாணவர்கள் உடனடி சேர்க்கை; பள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஆசிரியர்கள் தீவிரம்
அரசு பள்ளிகளில் மாணவர்கள் உடனடி சேர்க்கை; பள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஆசிரியர்கள் தீவிரம்
ADDED : மார் 19, 2025 08:54 PM
பெ.நா.பாளையம்; தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக் கூறி, அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, அரசு பள்ளி ஆசிரியர்கள் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக மேற்கொள்ள, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களில் முன் பருவ கல்வியை நிறைவு செய்யும், ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை, அந்தந்த வட்டாரங்களில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை, அப்பகுதி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை கணிசமான அளவில் அதிகரிக்க வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி சேர்க்கை பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் வட்டார அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சீருடை, இடை நிற்றலை குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத்தொகை, லேப்டாப், காலணிகள், கணித உபகரண பெட்டி, வண்ண பென்சில்கள், வண்ண கிரையான்கள், நில வரைபட நூல், நோட்டு புத்தகங்கள், பாடநூல், சைக்கிள், பஸ் பாஸ், சத்துணவு திட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி, வருவாய் உள்ள பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அரசு பள்ளியில் ஒன்று முதல் பிளஸ், 2 வகுப்பு வரை தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு பணியில், 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவ்வாறு, ஆசிரியர்கள் கூறினர்.