ADDED : பிப் 05, 2026 05:05 AM

இ ந்திய வரலாற்றில் சில மனிதர்கள் பாடப்புத்தகங்களுக்குள் மட்டும் அடங்கி விட முடியாதவர்கள். அவர்கள் வாழ்க்கை, சாதனைகள், தோல்விகள், போராட்டங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு காலத்தின் சிந்தனையையே மாற்றியவர்கள். அப்படிப்பட்ட அபூர்வமான மனிதர்களில் ஒருவர் தான் கோபாலசாமி துரைசாமி நாயுடு (ஜி.டி.நாயுடு).
1893ம் ஆண்டு கோவையில் பிறந்த இவர், இளம் வயதில் குறும்பும் துணிச்சலும் நிறைந்தவர். பின்னாளில் இந்திய தொழில்துறையின் அடித்தளங்களை அமைத்தார்.
பள்ளிப்படிப்பைத் தாண்டாதவர் என்றாலும், இயந்திரங்களே அவரது பாடப்புத்தகங்கள். மின்சாரம், இயந்திரவியல், ஆட்டோமொபைல், விவசாயம் என பல துறைகளில் சுயமாக கற்றுக் கொண்டார். இந்தியாவின் முதல் மின்சார மோட்டாரை உருவாக்கிய பெருமை, இவருக்கே உரியது.
1937ம் ஆண்டு, டி.பாலசுந்தரத்துடன் இணைந்து அவர் உருவாக்கிய உள்நாட்டு மோட்டார், இந்திய தொழில்துறையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த வெற்றியே பின்னாளில் பாலசுந்தரத்தால் டெக்ஸ்டூல் தொழிலும், அதன் தொடர்ச்சியாக, லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் (LMW) போன்ற பிரம்மாண்ட நிறுவனங்களும் உருவாக வழிவகுத்தது.
இவரின் கண்டுபிடிப்புகள் ஒரு பட்டியலாக அல்ல, ஒரு காலத்தின் கனவுகளாக இருந்தன. மிக மெல்லிய சவரன் கத்திகள், பழச்சாறு பிரித்தெடுக்கும் இயந்திரம், டேம்பர் -ப்ரூப் வாக்கு பதிவு இயந்திரம், மண்ணெண்ணெய் வாயிலாக இயங்கும் விசிறி... இப்படி பல.
அவரது ரசாண்ட் ரேசர், உலர் செல்கள் வாயிலாக இயங்கும் சிறிய மோட்டாருடன் தயாரிக்கப்பட்டது. அது ஜெர்மனியின் ஹெயில்பிரான் நகரில் உள்ள, தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டது என்பது, அவரது சர்வதேச அங்கீகாரத்தை உணர்த்துகிறது.
1952ம் ஆண்டு, இரண்டு இருக்கைகள் கொண்ட பெட்ரோல் என்ஜின் காரையும் அவர் உருவாக்கினார். ஆனால் தேவையான அரசாங்க உரிமம் மறுக்கப்பட்டதால் அந்த கனவு, உற்பத்தியாக மாற முடியாமல் போனது.
இது, ஒரு கண்டுபிடிப்பாளரின் கனவுகள் எப்படி நிர்வாக தடைகளால் முடக்கப்படலாம் என்பதற்கான சோகமான உதாரணமும் கூட.

