/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சிக்கு வந்த அந்தமான் விவசாயிகள்
/
பொள்ளாச்சிக்கு வந்த அந்தமான் விவசாயிகள்
ADDED : செப் 01, 2011 01:56 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கூட்டுறவு மார்க்கெட்டிங் சொசைட்டியில் அமைக்கப்பட்டுள்ள சோலார் உலர்களத்தை, அந்தமான் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.அந்தமான் தேசிய தோட்டக்கலைத் துறை, உயர்தர வேளாண் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், அதிகாரிகள் 9 பேர், விவசாயிகள் 26 பேர், தமிழகம் வந்துள்ளனர்.
இவர்கள் நேற்று, பொள்ளாச்சி கூட்டுறவு மார்க்கெட்டிங் சொசைட்டியில் அமைக்கப்பட்டுள்ள சோலார் உலர்களத்தை பார்வையிட்டனர். விற்பனை அபிவிருத்தியாளர் தங்கவேல், சோலார் உலர்களம் குறித்து விளக்கினார்.அந்தமான் குழு தலைவரும், வேளாண் அதிகாரியுமான தனியரசு கூறியதாவது:அந்தமானில், தென்னை பிரதான விவசாயமாக உள்ளது; இதையடுத்து, பாக்கு சாகுபடி உள்ளது. ஆண்டுக்கு 8 மாதம் மழை பொழிவு அதிகமாக இருக்கும். இதனால், தேங்காயில் இருந்து கொப்பரை உற்பத்தி செய்வது சிரமாக இருக்கிறது. அங்குள்ள விவசாயிகள், அடுப்பில் நெருப்பு மூட்டி, பெரிய தகரத்தை வைத்து, அதன் மீது தேங்காயை பரப்பி வைத்து கொப்பரை உற்பத்தி செய்கின்றனர். அம்முறையில், தரமான கொப்பரை உற்பத்தி செய்ய முடிவதில்லை. பொள்ளாச்சியில் அமைக்கப்பட்டுள்ள சோலார் உலர்களம், அந்தமான் சீதோஷ்ண நிலைக்கு பொருத்தமாக இருக்கும். லேசான வெயில் இருந்தாலே கொப்பரை உற்பத்தி செய்ய முடியும். அந்தமானிலும் இத்திட்டத்தை செயல்படுத்த பரிந்துரை செய்வோம்,'' என்றார்.