/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று குண்டம் விழா
/
வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று குண்டம் விழா
ADDED : ஜூலை 28, 2025 09:41 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், இன்று ஆடிக் குண்டம் திருவிழா நடக்கிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 32ம் ஆண்டு ஆடிக் குண்டம் விழா, கடந்த, 22ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது.
நேற்று மாலை, பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்பட்டது. 30 அடி நீளம், 3 அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. இன்று  அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து, பொதுப்பணித்துறை சார்பில்  அம்மன் சுவாமி அழைப்பும், அதைத் தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி கூறியதாவது:  குண்டம் திருவிழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு நான்கு இடங்களில் அன்னதானம் வழங்க, தற்காலிக கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள்  தங்கள் வாகனங்களை நிறுத்த, நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. நான்கு  இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு துறையினர் பவானி ஆற்றிலும்,  குண்டம் அருகேயும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், குளிக்க தடை  விதிக்கப்பட்டு உள்ளது. அதனால் ஆண்கள், பெண்கள்  குளிப்பதற்கு, 20  சவர் குளியல் அமைக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்க,15 வனப்பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். கோவிலுக்கு வருவதற்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி கூறினார்.
கோவிலை சுற்றியும், குண்டம் நடைபெறும் இடத்திலும், 70 இடங்களி ல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவில் முன்பு அமைத்துள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்து,  கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்கும் பணிகளில், போலீசார் ஈடுபட உள்ளனர். அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பார்வை யிட்டார்.

