/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனப்பகுதியில் மர்மமான முறையில் சிறுத்தை உயிரிழப்பு
/
வனப்பகுதியில் மர்மமான முறையில் சிறுத்தை உயிரிழப்பு
வனப்பகுதியில் மர்மமான முறையில் சிறுத்தை உயிரிழப்பு
வனப்பகுதியில் மர்மமான முறையில் சிறுத்தை உயிரிழப்பு
ADDED : ஆக 29, 2025 12:58 AM

தொண்டாமுத்தூர்: நரசீபுரம், வனப்பகுதியில், மர்மமான முறையில், 7 வயதான சிறுத்தை உயிரிழந்தது.
கோவையை அடுத்த போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட நரசீபுரம், வால்கரடு பிரிவு, வனப்பகுதியில், நேற்று காலை, 10:00 மணிக்கு, வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 7 வயதுடைய ஆண் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுத்தையின் உடல், சிறுவாணி அடிவாரம், வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பகல், 2:00 மணிக்கு, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் உதவி வனப்பாதுகாப்பாளர் மாதவ், போளுவாம்பட்டி வனச்சரகர் ஜெயச்சந்திரன் முன்னிலையில், வனக்கால்நடை டாக்டர் வெண்ணிலா தலைமையிலான மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முடித்தபின், அப்பகுதியிலேயே, சிறுத்தையின் உடலை எரித்தனர். இருப்பினும், சிறுத்தையின் இறப்புக்கான காரணங்கள் தெரியவில்லை.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தையின், உடலில் மேல் காயங்களோ, உள் காயங்களோ இல்லை. சிறுத்தையின் உடலில், அனைத்து பாகங்களும் உள்ளது. விஷத்தன்மையும் உடலில் இல்லை. சிறுத்தை, மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம். இயற்கையாக உயிரிழந்திருக்கலாம்.
இருப்பினும், சிறுத்தையின் முக்கிய பாகங்களை, பரிசோதனைக்காக, கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்ப உள்ளோம், என்றனர்.