ADDED : செப் 05, 2026 04:44 AM

இந்தியாவில் 9 வகையான பாறு கழுகுகள் உள்ளன. இதில் வெண்முதுகு, கருங்கழுத்து, மஞ்சள் முகம், செம்முகம் என 4 வகையான பாறு கழுகுகள் தமிழகத்தில் உள்ளன.
இந்த 4 வகை கழுகுமே அழியும் நிலையில் உள்ளன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றிய பறவை, இப்போது நீலகிரி, ஈரோட்டை இணைக்கும் ஒரு காட்டு பகுதியில் மட்டுமே வசிக்கிறது என்கிறார், இக்கழுகின் பாதுகாப்புக்காக இயங்கும் அருளகம் அமைப்பின் செயலர் பாரதிதாசன்.
அவர் கூறியதாவது: 1990களுக்கு பிறகு பாறு கழுகுகளின் எண்ணிக்கை குறைய துவங்கியது. 10 ஆண்டுகளுக்குள் 90 சதவீதம் கழுகுகள் இறந்தன. கால்நடைக்கு வலி நிவாரணியாக பயன்படுத்தும் 'டைக்ளோபெனாக்' மருந்து தான் அழிவுக்கு காரணம் என தெரியவந்ததால் 2006ல் அரசு அந்த மருந்தை தடை செய்தது.
பாறு கழுகுகள் இறந்த விலங்கை மட்டுமே சாப்பிடும். இறந்த கால்நடையை சாப்பிடும்போது, 'டைக்ளோபெனாக்' மருந்தின் எச்சம் அதன் கல்லீரல் பகுதியில் தங்கும். அதை ஜீரணிக்க முடியாமல் கிட்னி செயலிழந்து இறந்து விடுகிறது.
கால்நடைக்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் மூட்டு வலி உள்ளிட்டவற்றுக்கு டைக்ளோபெனாக் பயன்படுகிறது. மனிதர்கள் பயன்பாட்டுக்கு தடை இல்லை.
பறவைகள் அதிகம் இருந்தபோது தொற்று நோய் கிருமிகள் தாக்கம் குறைவாக இருந்தது. அதற்கு பறவைகள் மறைமுகமாக உதவின. கழிவுகளை அகற்ற பாறு கழுகு பேருதவி செய்தது.
பாறு கழுகுகள் இல்லாததால், ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் இறந்துள்ளதாக ஆய்வு முடிவு சொல்கிறது. காட்டு விலங்குகளுக்கு ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட தொற்று நோய் பரவும்.
இந்த நோய் பாதித்த உடலை சாப்பிட்டாலும் பாறு கழுகுக்கு எதுவும் ஆகாது. கழுகின் வயிற்றில் அமில சுரப்பு பி.எச். 1 நிலையில் இருக்கும். வயிற்றுக்குள் எவ்வளவு நச்சான உணவு சென்றாலும் ஜீரணமாகிவிடும். அப்படிப்பட்ட பறவைக்கே இந்த மருந்தை ஜீரணிக்க முடியவில்லை.
தமிழக அரசு கடந்தாண்டு பாறு கழுகு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கியது. 100 கி.மீ. பரப்பில் பாதுகாப்பான பகுதியை உருவாக்குவது இதன் நோக்கம்.
பாறு கழுகுகள் குறித்து தொழில்நுட்ப வசதியுடன் ஆய்வு செய்ய வேண்டும். மருந்து கடைகளில் இந்த கழுகை பாதிக்கும் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று சர்வதேச பாறு கழுகுகள் தினம்.
