/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேபிளவர் மரம் விழுந்து வாகனங்கள் சேதம்
/
மேபிளவர் மரம் விழுந்து வாகனங்கள் சேதம்
ADDED : பிப் 16, 2025 10:18 PM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி, மகாலிங்க புரத்தில் மே பிளவர் மரம் விழுந்ததில், நான்கு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
பொள்ளாச்சி தாகூர் வீதி முதல் தெரு ரவுண்டு ரோடு அருகே, பலவிதமான மரங்கள் இருந்தன. அதில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு மே பிளவர் மரம் அதிக சப்தத்துடன் விழுந்தது. வேருடன் சாய்ந்ததில், ஐந்து வாகனங்கள் மரத்தின் அடியில் சிக்கி சேதமடைந்ததுடன், அங்கு ஓரமாக நின்ற காரின் பின்பகுதியும் சேதமானது.
மேலும், கேபிள் ஒயர் அறுந்ததுடன், மின் ஒயர் மீது மரக்கிளைகள் விழுந்து கிடந்தன. அவ்வழியாக யாரும் செல்லாததால் பாதிப்பு இல்லை. மரம் விழுந்த தகவல் வேகமாக பரவியதால் அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி தலைவர் சியாமளா மற்றும் நகராட்சி அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மரத்தின் கீழே சிக்கிக் கொண்ட வாகனங்கள் மீட்கப்பட்டன. மகாலிங்க புரம் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.
அத்துமீறல்
மே பிளவர் மரம் விழுந்த இடத்தில், அவற்றை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டோர், திடீரென அருகே இருந்த வாகை மரத்தின் கிளைகளை வெட்டி அகற்ற துவங்கினர்.
இது குறித்து தகவல் அறிந்த வருவாய்துறை அதிகாரிகள், மரம் வெட்ட அனுமதி பெற்ற பின்னரே பணி மேற்கொள்ள வேண்டும். அனுமதியின்றி மரத்தை வெட்டக்கூடாது, என எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு மரம் வெட்டுவோருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பின், வருவாய்துறை அதிகாரிகள், தாசில்தார் மற்றும் சப் - கலெக்டருக்கு மரம் வெட்டியது தொடர்பாக புகார் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்த நகர பா.ஜ., தலைவர் பரமகுரு மற்றும் பா.ஜ.,வினர், அதிகாரிகளை மிரட்டியவர்கள் மற்றும் மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.