/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் அறங்காவலர் குழு நியமன விவகாரம்
/
கோவில் அறங்காவலர் குழு நியமன விவகாரம்
ADDED : செப் 23, 2024 12:10 AM

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூர் வீரபத்திரசாமி, தொட்டம்மாள் கோவில் அறங்காவலர் குழு நியமனம் தொடர்பாக, பக்தர்கள் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூரில் வீரபத்திரசுவாமி, தொட்டம்மாள் கோவில் உள்ளது. இங்கு வெள்ளி குலத்தைச் சேர்ந்த, 2,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீரபத்திரசாமி, தொட்டம்மாளை, தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இங்கு வெள்ளி குலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பாலமலை பழங்குடியினத்தைச் சேர்ந்த வெள்ளி குலத்தைச் சேர்ந்தவர்களும், அறங்காவலர்களாக நியமனம் செய்யப்படுவது வழக்கம்.
கோவிலின் சார்பில் மகாசபை செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும், அறங்காவலர்களை அரசு நியமனம் செய்யும்போது, மகாசபை கூட்டம் கூடி ஒப்புதல் வழங்கிய பின்பு அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படுவர். ஆனால், தற்போது மகாசபை ஒப்புதல் இன்றி அறங்காவலர்கள் நியமனம் செய்ய முயற்சி நடந்தது. இதனால் வீரபத்திரசுவாமி, தொட்டம்மாள் கோவில் பக்தர்கள் வேதனை அடைந்தனர். பூச்சியூரில் உள்ள கோவில் வளாகத்தில் வீரபத்திரசுவாமியை குலதெய்வமாக கொண்ட பக்தர்கள் சார்பில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில்,கோவிலில் ஒட்டப்பட்டஅறிவிப்பில், வீரபத்திர சுவாமி தொட்டம்மாள் கோவிலுக்கு இந்து சமய அறநிலை துறை கோவை உதவி ஆணையர் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், இடுகம் பாளையம் அனுமந்தராய சுவாமி கோவில் செயல் அலுவலர் தக்காராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொறுப்பு ஏற்க வந்தபோது, கோவில் வரவு, செலவு கணக்குகள், அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் பொறுப்புக்களை தக்கார் வசம் ஒப்படைக்க யாரும் முன்வரவில்லை.
எனவே, கோவிலின் நலன் மற்றும் சொத்துக்கள் பாதுகாப்பு கருதி கடந்த, 20ம் தேதி தன்னிச்சையாக பொறுப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும் கோவில் பெயரில் எந்த வகையிலும் நன்கொடை வசூலிக்க கூடாது. கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இந்து சமய அறநிலைத்துறை அனுமதி இன்றி கூட்டம் நடத்தக்கூடாது. மீறினால், குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் என, அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து, 200க்கும் மேற்பட்ட வீரபத்திரசுவாமி பக்தர்கள் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
இது குறித்து பூச்சியூர் ஊர் கவுண்டர் சரவணகுமார் கூறுகையில், ''கோவில் நிர்வாகம் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் இந்து சமய அறநிலைத்துறைக்கு தவறான தகவல் கொடுத்து கோவிலை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம்'' என்றார்.
பக்தர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், உரிய உயர் அதிகாரிகளை அணுகி, இப்பிரச்சனைக்கு சட்டபூர்வமாக தீர்வு காண அறிவுரை வழங்கினர்.
இச்சம்பவத்தால், போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.