/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மரம் வளர்ப்பில் கூடுதல் ஆய்வு தேவை'
/
'மரம் வளர்ப்பில் கூடுதல் ஆய்வு தேவை'
ADDED : ஜூலை 25, 2025 09:35 PM

கோவை; கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள இந்திய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் (ஐ.எப்.ஜி.டி.பி.,), அகில இந்திய ஒருங்கிணைந்த ஆய்வுத் திட்டங்கள் மற்றும் வன மரபணு வள மேலாண்மை குறித்த, 2 நாள் தேசிய பயிலரங்கு துவங்கியது.
மத்திய வன அமைச்சகத்தின் கீழ், இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணைய (கேம்பா) நிதியுதவியுடன், கடந்த டிச., 2019ல், இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களால் (ஐ.சி.எப்.ஆர்.இ.,) பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆழ்குளிர் விதை மரபணு வங்கி, கள மரபணு வங்கி, நாடு முழுதும் 80 மர இனங்களின் விதைகள், விதை மரபணு வங்கியில் சேமித்தல் உள்ளிட்டவை வரும் செப்., நிறைவு பெறுகின்றன. இவற்றைத் தொடர்வது மற்றும், இதுவரையிலான பணிகளை மதிப்பாய்வு செய்வது தொடர்பாக, இந்த இருநாள் பயிலரங்கு நடக்கிறது.
ஐ.சி.எப்.ஆர்.இ., தலைமை இயக்குநர் காஞ்சன் தேவி, காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். தமிழ்நாடு வன பயிற்சியக இயக்குநர் சேவா சிங், சிற்றாய்வுகள், கையேடு மற்றும் தயாரிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:
மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. காகிதம், அறைகலன்கள், கட்டுமானம் என வனம் சார் தொழிற்துறைக்கான தேவையும் அதிகரிக்கிறது.
எனவே, தரமான மரங்களை, அதிக உற்பத்தித் திறனுடன், மிக வேகமாக வளரச் செய்வது, திசு வளர்ப்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல், மேம்படுத்தப்பட்ட மர ரகங்களை உருவாக்குதல், வனத்துக்கு வெளியே காடு வளர்ப்பை ஊக்குவித்தல் உட்பட பல்வேறு கோணங்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக, ஐ.சி.எப்.ஆர்.இ., துணை தலைமை இயக்குநர் ராஜேஷ் சர்மா , காணொலிக் காட்சி வாயிலாக, சிறப்புரையாற்றினார்.
ஐ.சி.எப்.ஆர்.இ., துணை தலைமை இயக்குநர் கீதா ஜோஷி, ஐ.எப்.ஜி.டி.பி., இயக்குநர் யசோதா, விஞ்ஞானிகள், விவசாயிகள், வனத்துறை சார்ந்த தொழில்துறையினர் பங்கேற்றனர்.