/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் இரவு காவலர்கள் சம்பளமின்றி தவிப்பு
/
மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் இரவு காவலர்கள் சம்பளமின்றி தவிப்பு
மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் இரவு காவலர்கள் சம்பளமின்றி தவிப்பு
மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் இரவு காவலர்கள் சம்பளமின்றி தவிப்பு
ADDED : செப் 22, 2024 05:53 AM
கோவை, : கோவை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் இரவு காவலர்கள், துப்புரவாளர்கள் மற்றும் சுகாதார துப்புரவாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காததால், அக்குடும்பத்தினர் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 17 மேல்நிலைப்பள்ளிகள், 10 உயர்நிலைப்பள்ளிகள், 37 நடுநிலைப்பள்ளிகள், 83 ஆரம்பப் பள்ளிகள், ஒரு சிறப்பு பள்ளி என, 148 பள்ளிகள் நடத்தப்படுகின்றன.
இப்பள்ளிகளுக்கு ஒப்பந்த முறையில் துப்புரவாளர், சுகாதார துப்புரவாளர், இரவு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்த காலம் ஆக., 31ல் முடிந்தது; புதிய ஒப்பந்தம் கோருவதற்கு அவகாசம் தேவை என்பதால், அக்., வரை பழைய ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்த காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகளில் காலியிடம், 5,000 சதுர மீட்டர் மற்றும் மாணவர் எண்ணிக்கை 450க்கு மேல் இருப்பின் 2 துப்புரவாளர், ஒரு சுகாதார துப்புரவாளர், ஒரு இரவு காவலர், 5,000 சதுர மீட்டருக்கு குறைவாக உள்ள பள்ளிகள்; மாணவர்கள் எண்ணிக்கை 1,000 அல்லது அதற்கு மேல் இருந்தால் 3 துப்புரவாளர், தலா ஒரு சுகாதார துப்புரவாளர், இரவு காவலர், மாணவர் எண்ணிக்கை 450க்குள் இருந்தால் தலா ஒருவர், 50க்குள் இருந்தால் சுகாதார துப்புரவாளர், இரவு காவலர் தலா ஒருவர் வீதம் நியமிக்கப்பட்டனர். இவ்வகையில், 161 துப்புரவாளர், 133 சுகாதார துப்புரவாளர், 137 இரவு காவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலி ரூ.720 வழங்க வேண்டும்.
இத்தொகை ஒப்பந்த நிறுவனத்தினரால் வழங்கப்படுவதில்லை. மாறாக, பிடித்தம்போக, சொற்பத்தொகையே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதில், இரவு காவலர்களாக பணிபுரிவோருக்கு எட்டு மாதங்களாக சம்பளமே வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
புதிய ஒப்பந்தம் கோரும்போது, வேறொரு நபர் ஒப்பந்தம் கோரினால், இதுநாள் வரை பணியாற்றிய இரவு காவலர்கள் மற்றும் துப்புரவாளர், சுகாதார துப்புரவாளர்களுக்கு நிலுவை சம்பளம் யார் கொடுப்பது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
ஆகவே இப்பணியை, மாநகராட்சி சுகாதாரப் பிரிவே எடுத்துச் செய்ய வேண்டும் அல்லது ஒப்பந்த பணியாளர்களுக்கு கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் மாதந்தோறும் வழங்கப்படுவதை, வேலையளிப்பவர் என்கிற முறையில், மாநகராட்சி நிர்வாகமே பொறுப்பேற்று உறுதிப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.